Saturday 25 November 2023

காஸாவா? கல்லறையா? (DO or DIE)

காஸாவா? கல்லறையா?
(DO or DIE)

பாலையில் பூத்த 
கண்ணீர் புஷ்பம் 
பாலஸ்தீனம்!

வெடித்தால்தான் 
விடியும்!
விடிந்தாலும் 
கருமேகம் 
அலை மோதும்!

ஓயாத போராட்டம் 
பிறப்புக்கும் 
இறப்பிற்கும் 
இடைவெளி இல்லை!

குந்த இடம் கேட்டு
படுக்க பாய் விரித்த
யூதர்களின் அநீதி!

ஆயுதக் கிடங்கு 
அமெரிக்காவின் 
ஆசியுடன் 
இஸ்ரேலின் பேயாட்டம்!

இடிந்து விடும் 
கட்டிடங்கள் 
முடிபாடுகளில் 
சடலங்கள்!

உதிரத்தைப் பாலாக்கி 
ஊட்டி வளர்த்த 
இளம் தளிர்கள் 
புதை குழிகளில் 
தாய்மார்களின் 
அவல ஓலம் ... 
உலகம் செவிடானதோ?

மாந்தர்களின் 
மனிதாபிமானம் 
மண்ணரையில் 
புதைந்து போனதோ?

தாயக விடுதலைக்காக 
தளராது போராடி 
மடியும் மாவீரர்கள் ...

ஆயுதங்கள் இல்லை 
ஆனாலும் 
யூதர்களைப் பந்தாடும் 
பாலஸீதீன விடுதலை வீரர்கள் ...

காஸாவா? சாவா?
சரித்திரம் படைக்கும் 
ஹமாஸின் துணிவு!

காஷ்மீரக் கவிஞன் 
அல்லாமா இக்பாலின் 
நெஞ்சில் மோதிய 
நினைவலைகள்!

"திப்புவின் தியாகம் 
மெல்ல ஒலித்தது 
வீர மண்ணில் 
முத்தம் பதித்தேன் ...
மானம் இழந்து வாழ்வதே
வாழ்வெனில்
மரணம் தழுவி மடிவதே
உன்னதம் ...
கல்லறை எனது காதில் 
ஒலித்தது"

ஆம்..இன்று
பாலஸ்தீன பாலைவன
கூட்டுக் கல்லறைகளில்
அது எதிர் ஒலிக்கிறது!

வாலாஜா J.அசேன், B.A, B.L, Ex.MLA.,



Thursday 28 September 2023

ஆடி மாசம் காத்தடிக்க... ஆடுப்பய கூத்தடிக்க...

நந்தவனத்தில் ஓர் ஆண்டி
அவன் நாலாறு மாதமாய்
குயவனை வேண்டி.,
கொண்டு வந்தானே ஒரு தோண்டி...
அதைக் கூத்தாடி கூத்தாடி
போட்டுடைத்தாண்டி..!

அடித்தளமில்லா அரசியல்வாதி
அதிகார போதையில்
ஆதியும் அந்தமும் 
அவரே என்று
ஆட்டம் போட்ட
அண்ணாமலையின்
வண்ணக் கனவுகள்
மண்ணைக் கவ்வின..!

அறிஞர் அண்ணாவை 
விமர்சிக்க
அரை வேக்காடு 
அண்ணாமலைக்கு
அருகதையில்லை.!

மாமூல் சேற்றில் மலர்ந்த
தாமரைக்கு
தமிழ்நாட்டில் இனி 
எதிர்காலமில்லை..!

லட்டிக் காட்டி
லூட்டி அடிக்க 
கர்நாடகம் அல்ல...
இது தமிழ்நாடு..!

கொஞ்சமாவது
அரசியல் ஞானம்
இருக்க வேண்டும்..!
நீயோ ஞானசூன்யமென
நிரூபித்துவிட்டாய்..!

உன் வாய்ஜாலக்
கானல் நீரில்
கப்பலை ஓட்டினாய்..!
அதிமுக கைநழுவியதால்
ஆண்டி உடைத்த 
தோண்டியானாய்..!

வாலாஜா ஜெ.அசேன் Ex MLA

Monday 25 September 2023

கறுப்பு ஆடு வாலை ஆட்டுகின்றது!

கறுப்பு ஆடு வாலை ஆட்டுகின்றது..!

புலிக்கு எலி
சமமாகுமா.?

சாக்கடை,
பூக்கடைக்கு
சவால் விடுவதா.?

ஒவைசி,
உடனிருந்தே
கொல்லும் துரோகி.!

பாஜகவின் 'ஸ்லீப்பர் செல்', 
என்பதை - நம்
தேசமே அறியும்..!

வாய்ச் சவடாலால்
ஹைதராபாத்தின்
மக்களை மயக்கலாம்.!

ஒவைசி

தமிழ்நாட்டு மக்கள்
நரியின் ஊளைக்கு
செவிசாய்க்க மாட்டார்கள்.!

தைரியமிருந்தால்
தமிழ்நாட்டிற்கு வா.!
தொகுதியை
நீயே தேர்ந்தெடு.!

எங்கள் கட்சியின்
சாதாரணத் தொண்டனை
எதிர்த்துப் 
போட்டியிட்டுப் பார்.!

மோடியின், 
புரட்டு அரசியலை 
புரட்டிப் போட்டு,
புதுயுகம் காண
புறப்பட்ட 
நவயுகச் சிற்பி.,

திசை தெரியாமல் தவித்த 
இந்திய அரசியலுக்குத் 
திசைகாட்டிய
துருவ நட்சத்திரம்!
எங்கள் கோமான்
ராகுல் காந்தி.!

அவரிடம்
மோதுவதற்குத் 
தகுதி வேண்டும்.!

மோடிக்கு வால்பிடிக்கும்,
உனக்கு 
அந்தத் தகுதி
கிடையாது..!!

வாலாஜா ஜெ.அசேன், Ex.MLA., 
தமிழ்நாடு காங்கிரஸ் துணைத் தலைவர்

Wednesday 30 August 2023

களவாடப்பட்ட கடின உழைப்பு!

களவாடப்பட்ட கடின உழைப்பு!


அன்று...
விண்ணோடும் 
முகிலோடும்
விளையாடும்
வெண்ணிலவே..!

இன்று...
விண்ணோடும், 
விஞ்ஞான சந்திராயனோடும்
இசைந்தாடும்
பால் நிலவே..!

உன்னில், 
'பாட்டி வடை சுட்ட கதை'
பழமையானது..!
ஆனால்...

உன்னை வைத்து
தாத்தா சுடும் வடையோ...
வகை வகையானது..!

சாதனையை 
வார்த்தெடுக்க உழைத்தவனுக்கு
கைத்தட்டல் மட்டுமே
கதையானது..!

ஊர் சுற்றும் உல்லாசிக்கு
விண்ணளவு
பாராட்டானது..!

இஸ்ரோ அணியின் உழைப்பு
களவாடப்படும்
விந்தையானது..!


1962 இல்...
இந்தியப் பொருளாதாரத்தின்
இருண்ட காலம்., 
அது
இஸ்ரோ கண்விழித்த நேரம்...

வறுத்தெடுத்த
வறுமையின் வேரை
அறுத்தெறிந்த
அருந்தவப் புதல்வன் 
நேருபிரான்..,

விக்ரம் சாராபாய்
மற்றும் 
ஹோமி பாபாவின்
துணையுடன்
விண்வெளி
ஆய்வுக் களத்தை
வடிவமைத்தார்..!

ஆரியபட்டா துவங்கி
சந்திராயன் 3 வரை
மண்ணிலிருந்து
விண்ணோக்கிப் பாய்ந்த
அக்னிச் சிறகுகள்
அனைத்தும் - அன்று 
நேரு விதைத்த
விதையின்
விருட்சங்களாகும்..!

மதம் பார்த்து
மகுடம் சூட்டப்பட்ட
மாமனிதர் போடும்
சதிராட்டமோ.., 
வேதனையானது..!

அங்கே
வானத்து நிலவில்
சந்திராயனின்
ஆராய்ச்சி..,

இங்கே 
வானவில்லின்
உச்ச நட்சத்திரத்தின்
பாத சரண
ஆராய்ச்சி...

பதவி போதையில்..,
இரத்த வெள்ளத்தில்
குளிர்ச்சியைக் காண்பவன்.,
புல்டோசரைக் கொண்டு
எளிய மக்களின் வசிப்பிடங்களையும்
இடித்து மகிழ்பவன்.,
காவலர் பாதுகாப்பில்
விசாரணைக் கைதிகளை
சுட்டுக் கொல்லும் அநீதியை
நீதியாக்குபவன்தான்
சந்நியாசி - என
கண்டுபிடிப்பு..!

தமிழ் அகராதியிலோ..,
தினம் தினம்
இரந்து உண்பவன்,
முற்றும் துறந்தவன்தான்
சந்நியாசி..!

விஞ்ஞானத்தை
சந்தைப் பொருளாக்கி..,
பித்தலாட்டமாய்
விளம்பரம் தேடும்
விந்தை மனிதர்களை
வீழ்த்த..,

பெரியாரின்
புரட்சி வெடிக்கும் காலம்
வெகு தொலைவில் இல்லை..!

வாலாஜா ஜெ.அசேன் Ex MLA

Sunday 13 August 2023

பஞ்சாயத்தில் வடிவேல் ஜி! பார்லிமென்ட்டில் மோடிஜி!


பஞ்சாயத்தில் வடிவேல் ஜி!
பார்லிமென்ட்டில் மோடிஜி!

மணிப்பூரின்
மகரந்த பூமியில் 
கந்தகச் சாரல்..!
வீதியெங்கும்
வெடிச் சத்தம்..!

நங்கையரை 
நிர்வாணப்படுத்தி 
நகர்வலமாய்
அலையவைத்து..,
வல்லுறவில் சிதைத்து 
சீரழிக்கும் 
கும்பல்களின் 
கொடிய பேயாட்டம்..!

நாதியற்று போனதடா
மணிப்பூர் மாநிலம்..!

தாயக மண்ணில் 
அகதியாக..,
கொடுங்கோல் ஆட்சியில்
கடுங்காடுகளில்
மக்களின் வனவாசம்..!

ஆணாதிக்கத்தால்
அஞ்சும் வஞ்சியர்..,
மியான்மர் நாட்டில்
தஞ்சம் தேடும் 
அவலம்..!

அபயம் தரவேண்டிய 
ஆட்சியாளர்கள் 
உபயோகமற்றுப்
போனதால்..,

உச்சநீதிமன்றமே 
கலவரத்தை அடக்க 
மேற்கொண்ட
முயற்சிக்குப் பிறகும்..,

நாட்டை ஆளும் பிரதமர்
எதிர்வரும் 
சுதந்திர தின விழாவிற்கு 
தனக்கான 
ஆடை அலங்காரத்
தேர்வின் கனவில்
ஆழ்ந்து இருப்பதால்
எதிர்கட்சிகள்
நம்பிக்கையில்லாத் தீர்மான 
அம்புகள் தொடுத்தனர்..!

நீண்ட முயற்சிக்குப் பின்
நாடாளுமன்றத்தில் விவாதம்..!

வராதவர் வந்தார்..,
வாய்ச் சவடாலை
அவிழ்த்து விட்டார்..!
எதிர்க் கட்சிகள் எழுப்பிய 
எந்தக் கேள்விக்கும்
பதில் இல்லை..!

மாறாக...
மணிப்பூர் கலவரத்துக்கு
ஜவகர்லால் நேருவே
காரணம் என்றார்..!

உடைந்து 
உருக் குலைந்து இருந்த 
இந்தியாவை மீட்டு 
உருவம் கொடுத்து..,
அவர் கபாலத்தில் 
கசிந்த திட்டங்களால்தான்
இந்தியா இன்றளவும் 
இயங்கிக் கொண்டுள்ளதை
மறந்து..,

வாய்க் கொழுப்பால்
வக்கணை பேசினார்..!
குடும்ப அரசியல் என
குதியாட்டம் போட்டு 
விடுதலை வேள்வியில் 
வெங்கொடுமைச் சிறைச்சாலையில் 
வாடிய குடும்பத்தைப்
பரிகசித்தார்..!

மொத்தமாக
நையாண்டி மேளம் 
கொட்டினார்..!

துயரம் கவ்விய 
மணிப்பூரின் விடியலுக்கு 
விடை காணாமல்..,

"ஏம்ப்பா கையப் புடிச்சு
இழுத்தியா"?
எனும்...
வடிவேலு நகைச்சுவையின் 
பாணியில்
பாராளுமன்றத்தில் 
தன் நிலையை 
வெளிப்படுத்தினார்..!

பாவம்
எதிர்க் கட்சியினர்..,
கல்லுளி மங்கனை
எதிர்த்து 
வெளிநடப்பு செய்தனர்..!

மணிப்பூரின் துயரம் 
தொடர் கதைதானா..?
விடியாதோ..?!

வாலாஜா ஜெ.அசேன் Ex MLA

Wednesday 9 August 2023

2024 தேர்தல் களத்தில், பாடப் போவது அடிமை கீதமா? விடுதலை கீதமா?

2024 தேர்தல் களத்தில்...
பாடப்போவது
அடிமை கீதமா? விடுதலை கீதமா?

*****


அழிக்க நினைப்பவரின் 
பாதார விந்தங்களுக்கு 
பணிவிடை செய்யும் 
ஈபிஎஸ் ஓபிஎஸ்..!
தகுதியான தலைமையின்றி
தண்ணீரில் தாமரையாக 
தள்ளாடும் தலைவர்களால் 
தற்கொலை வழியில் அதிமுக..!

1984 இல்
மக்கள் தலைவர் *எம்ஜிஆர்*
மரணப்படுக்கையில் விழுந்த போது
அன்றைய இந்தியப் பிரதமர் 
அன்னை இந்திரா காந்தி
அப்பல்லோ மருத்துவமனைக்கு
பறந்து வந்து..,
மருத்துவர்களின் ஆலோசனை பெற்று 
விமான ஆம்புலன்ஸில்
அமெரிக்க பரூக்ளின் 
மருத்துமனைக்கு அனுப்பியதால்
அன்று
எம்ஜிஆர் உயிர் பிழைத்தார்..!

1987 இல்
எம்ஜிஆர் மரணித்த பின் 
"ஜா" , "ஜெ" என உடைந்த 
அதிமுகவை ஒன்றிணைத்து 
ஜெ வை முதல்வராக்கியது
காங்கிரஸ் பேரியக்கம்..!

2016 இல்
அயர்ன் லேடியாக
வர்ணிக்கப்பட்ட ஜெயலலிதா 
உயிருக்குப் போராடிய நிலையில் இருந்தபோது..,
பிரதமர் நரேந்திர மோடி 
அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்து ஜெயலலிதாவை 
வெளிநாட்டு மருத்துவம் 
பெற அனுப்பி இருந்தால்...
ஒரு வேளை ஜெயலலிதா
பிழைத்திருக்கக் கூடும்.

மாறாக...
அதிமுக-வின் தலைமையில்
வெற்றிடம் ஏற்பட்டால் 
பாஜக-வைக் கொண்டு 
நிரப்பலாம் என்று
மனப்பால் கொண்டார்.‌.
ஜெயலலிதாவின் மரணத்திற்கு பின்
பார்வையாளராக 
பக்குவமாக வந்து 
அதிமுக-வில் பிளவு
காண வைத்தார்..!
அதிமுகவின் அடி நாதத்திற்கு 
அமித்ஷா ஆதார
புருஷனானார்..!

சுய சிந்தனை இழந்த அதிமுக 
இரண்டு பட்டு
தமிழக அரசியலில் 
இரண்டாம் இடத்தை
பாஜகவிற்கு 
தாரைவார்க்கும் அவலநிலை..!

மாநிலங்களவையில் 
பாஜகவின்
'டெல்லி அதிகார 
குறைப்பு மசோதா'விற்கு 
ஆதரவுக்கரம் நீட்டி
அடிமை சாசனத்தை 
அறிவித்துவிட்டது
அடிமைகள் கூட்டம்..!

தலைசிறந்த 
அரசியல் ஆளுமையான 
எம்ஜியாரால் துவக்கப்பட்டு 
தன்னிகரில்லா தைரிய மங்கை ஜெயலலிதாவால்
கட்டிக் காக்கப்பட்டு 
வளர்ந்தது அதிமுக..!

எந்த ஜெயலலிதாவால் 
*மோடியா-லேடியா* என
சவால் விட்டு 
ஜெயலலிதாவால் 
தோற்கடிக்கப்பட்ட
மோடியின் காலில் 
அதிமுக-வை சரணடைய வைத்திருப்பது..,
எம்ஜியாருக்கும், 
ஜெயலலிதாவிற்கும் - செய்யும் 
மாபெரும் துரோகமாகும்..!

இதயத் துடிப்பில் ஒலிக்கும் 
லப்டப் லப்டப் ஓசையில் 
எம்ஜிஆர், ஜெயலலிதா
எம்ஜிஆர், ஜெயலலிதா...
என்ற துடிப்பாக உணர்ந்து 
மகிழும் தொண்டனே...
2024 தேர்தல் களத்தில்....
நீ பாடப் போவது
அடிமை கீதமா..?!
விடுதலை கீதமா..?!
முடிவு செய்..!

வாலாஜா ஜெ.அசேன் Ex MLA

Friday 4 August 2023

படமல்ல...தடுப்பில்லா துயர வெள்ளம்!

படமல்ல...தடுப்பில்லா

துயர வெள்ளம்..!

துயரத்தில் துவண்டு

தலைகவிழ்ந்த சிறுமிக்கு 

தலைவனின் ஆறுதல்

அணைப்பு..! தேறுதல்

வார்த்தைகள்..!


இழப்பை...

வார்த்தையால் அல்ல...

விழிகளின் ஓரத்தில்

கசியும் கண்ணீரால்

துயரக் கதையை

உணர்த்திவிட்ட சிறுமி..!


இது ஒரு படம் மட்டுமல்ல...

நூற்றுக்கணக்கான

படங்கள் பதிவிடப்படாமல்

புதைந்து போய்விட்டன..!


தலைகவிழ்ந்தது

சிறுமியல்ல...

உலகின் முன்

இந்தியாவே தலைகவிழ்ந்து

நிற்கிறது..!


மணிப்பூரில் பாரதமாதாவின்

துகிலுரியப்பட்டு...

அப்பப்பா...

வேதனையடா..!


காப்பாற்ற

கண்ணனும் வராமல்

கண்ணயர்ந்து போனானே..!


விடியாதோ...

விடியாதோ...

இன வெறியர்களின் 

பேயாட்டம் விடியாதோ..!


வடியாதோ...

வடியாதோ...

அப்பாவி மக்களின் 

துயர வெள்ளம் வடியாதோ..!


மாளாதோ...

மாளாதோ...

மணிப்பூரின்

மரண ஓலம் மாளாதோ..!


வாலாஜா ஜெ.அசேன் Ex MLA

Tuesday 1 August 2023

மணிமேகலை காப்பிய வரிகளுக்கு மோடியின் ஆட்சியே சாட்சி!

மணிமேகலை காப்பிய வரிகளுக்கு மோடியின் ஆட்சியே சாட்சி!


ஐம்பெரும்
காப்பியங்களில்
ஒன்றாகத் திகழும்
மணிமேகலை காப்பியம்
நீதி தவறி
ஆட்சி புரியும்
மன்னனைக் கொண்ட நாடு 
இயற்கை
இன்னல்களால் அல்லலுறும் நாடு 
மயான
பூமியாகும்
என்பதை..,

"கோல் நிலை திரியின்
கோள் நிலை திரியும்..!
கோள் நிலை திரியின் 
மாரி வரங் கூறும்.
மாரி வரங் கூறின்l
மன்னுயிர் இல்லை..!
மன்னுயிர் எல்லாம்
மண்ணாள் வேந்தன்
தன்னுயிர் என்னும்
தகுதியீன்றாகும்..!"

ஒரு நாட்டின்
செங்கோல் ஆட்சி
தவறுமானால்
இயற்கை தன்னியல்பை
இழக்கும்...
மழை பெய்யாது
கெடுக்கும்...
அதிகம் பெய்தும்
கெடுக்கும்..!

அரசனின்
ஆட்சிக்குட்பட்ட
மக்களே
அரசனுக்கு உயிர்
போன்றவர்கள்.
இந்த உயிர்கள்
பாதிக்கப்பட்டால்
நாடே மயானமாகும்..!

மேற்கண்ட வரிகளை 
இன்றைய
பாரதத்தின் நிலையோடு
ஒப்பிட்டுப் பார்க்கும் போது
ஹிமாச்சல பிரதேசம்,
டெல்லி, பஞ்சாப்,
ஹரியானா, உத்தரகாண்ட்,
உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்களில்
வெள்ளத்தின் ஆட்சி
மக்களின் உயிரோடு
விளையாடிக்
கொண்டிருக்கிறது..!

மணிப்பூர் மாநிலமோ
சொந்த மண்ணிலேயே
மக்கள் அகதிகளாக
அலையும் அவலநிலை..!

அங்கே தீவிரவாதம் தலைவிரித்தாடுகிறது.
மௌனத்தில் மோடிஜி..!

இயற்கையின்
உபாதைகள் மட்டுமல்ல...
கோர ரயில் விபத்துகள்,
பேருந்து விபத்துகள்,  
பணமதிப்பிழப்பு,
வழக்கத்துக்கு மாறான 
இதுவரையில்லாத அளவில்
விலைவாசி உயர்வு,
மணிமேகலை
காப்பிய வரிகளுக்கு
சாட்சியாக உள்ளது.!

மனசாட்சியின் குரலாக 
மாதந்தோறும் 
தற்பெருமைகளை
அலம்பலாக்கும் மோடி
நிலைமைகளை
உணர்ந்து உடனடியாக
ராஜினாமா
செய்ய வேண்டும்..!

இன்றேல் மக்களால்
தூக்கி எறியப்படும்
அவலநிலைக்கு
உள்ளாவார்..!

வாலாஜா ஜெ.அசேன் Ex MLA

Wednesday 26 July 2023

துஞ்சியது போதும்! விஞ்சி எழு!

மணிப்பூர் மண் 
மயான பூமியாகத்
துடிக்கும் போது 
அரசியல் சாசன செயல்பாட்டில் 
மோடியின்
மௌன விரதம்..!

பாராளுமன்றத்தை
சந்திரமுகி - பட
பேய் மாளிகையாக
நினைத்து அஞ்சுகிறார்..!

கேள்வி கேட்பார்கள் 
இல்லையென்றால் 
கெட்டிமேளம் 
கொட்டுவது போல 
முழக்கமிடும் மோடி
பாராளுமன்றமென்றால்
பதுங்கி ஒதுங்குவது
ஏன்..?

பஞ்சசீலம் 
போதித்த பூமி - இன்று
பஞ்சமா பாதகர்களின்
கொலைக்களமாக 
மாறிவருகிறது.!


சேனாக்களெல்லாம்
பேனாக்களால்
புதையுண்டு போனதை 
உலக வரலாறு 
பதிவு செய்துள்ளது..!

குரங்குக் கூட்டம் 
மணிப்பூர் மலர்களை 
நிர்வாணமாக்கி 
வன்கொடுமை செய்து 
கொண்டுள்ளதை
நினைத்தால்...

கொலை வாளினை எடடா...
கொடியோர் செயல் அறவே...

எனும் பாவேந்தரின்
பாடலைப படித்து விட்டு 
பாய்விரித்துப்
படுப்பது தகுமோ
என்ற துடிப்பு
நெஞ்சைத் துவளச்
செய்கிறது..!

எனவே...
விடியலை
வென்றெடுப்போம் 
வா..!

ஆண்ட பரம்பரையடா
நாம் மீண்டும் 
ஆள நினைப்பதில் 
சுணக்கம் ஏனடா..!

துஞ்சியது போதும் 
விஞ்சி எழு..!
எஞ்சிய காலத்தை
நெஞ்சம் நிறைந்த 
தன்னிகரில்லாத்
தலைவன் 
ராகுல் காந்தியின் 
ஆட்சி மலர்ந்திட
உழைப்போம்..!
எழுக.! எழுக.!

வாலாஜா ஜெ.அசேன் Ex MLA

Thursday 13 July 2023

அமரகாவியம் அப்பாச்சி!

அமரகாவியம் அப்பாச்சி!


ஆங்கில ஏகாதிபத்தியத்தின் முன்
ஆமையென அடங்காமல்  
யானையெனப் பிளறிய  
மானமறவர் படையின்  
மக்கள் தலைவனே..! 

தாயக விடுதலைக்காக   
சிறைக் கருவறையில்  
ஒன்பதாண்டுகள் 
கடுந்தவம் புரிந்தாய்..!

விடுதலைக்குப் பின்  
வறுமையின் சீற்றம்  
வாட்டி வதைத்த போது., 
மக்களின் துயர வலியை -நின்
மனவலிமையால்  வீழ்த்தி
வித்தக முதல்வரானாய்..! 

அணைகள், ஆலைகள், 
தொழிற்சாலைகள், 
கல்விச் சாலைகள்,
கனிமச் சுரங்கங்கள்,  
உருக்காலைகளென 
அசுர வளர்ச்சி..! 
ஒன்பதாண்டுகள்
உன் ஆட்சியின் மாட்சி..!

அடுத்து,
ஒன்றிய அரசின்   
தலைவிதியை நிர்ணயிக்கும்
ஒப்பற்றத் தலைவனாக
உலா வந்தாய்..! 
எஞ்சிய ஆண்டுகளில்
பாரதம் 
ஏற்றம் காண
உழைப்பின் உச்சம்‌ தொட்டு
தேய்பிறை ஆனாய்..!

மிஞ்சியது உன்னிடம்
மூன்று 
கதர் வேட்டிச் சட்டைகள்..!  
தலையணைக்கு கீழே
₹153.30 காசுகள்..!
ஆம்! 
வேதனையின் வியப்பு..!  
உனக்காகச் சொத்து
சேரக்கவில்லை!
உன்னையே 
தமிழினத்தின் சொத்தாக்கி 
தமிழர்தம் நெஞ்சில்  
அணையா அமரதீபமானாய்..!

வாலாஜா ஜெ.அசேன், Ex.MLA

Saturday 8 July 2023

நீதியே! நீ இன்னும் இருக்கின்றாயா?



நீதியே...நீ இன்னும்
இருக்கின்றாயா...? - இல்லை,
நீயும்,
கோத்ரா கொலைக் களத்தில்
மாண்டு போனாயா...?

குற்றவாளிகளோ
கோபுரக்கலசங்களில்...
குரல் கொடுப்பவரோ
தண்டனை வாசலில்....
தருமத்தின் நெஞ்சில்
ஈட்டியைப் பாய்ச்சுவதோ...?
 
ஏவி விடப்பட்டு,
வேட்டைக்காக 
வட்டமிடும் 
வல்லூறுகளின்
பொய்வழக்குத் 
தாக்குதலை
எதிர்கொள்ள...
நீதியின் நிழலை 
நாடினால்- அங்கேயும்
அநீதியின் ஆர்ப்பரிப்பு...!
 
கோடானகோடி
நெஞ்சங்களில்
கொலு வீற்றிருக்கும்
கோமகன் ராகுலை
வஞ்சனையால்
வீழ்த்த முயல்வதோ?
 
ஏழிரண்டாண்டுகள்,
பாதுகைகள்
நெறிதவறாமல்
ஆண்டபூமியடா..!
பாதுகை மன்னனின்
பெயரை
உச்சாடனம் செய்து
தேர்தல் பரணி பாடி
பதவி பிடித்து
பேயாட்சியை
அரங்கேற்றுவதோ...!
 
2014-இல்
ஆரம்பமானது
குஜராத்துக்குள்ளே...
2024-ல்
ஆடி 
அடங்கப் போவது
டெல்லிக்குள்ளே.!
ஆராய்ந்து பார்
மனதுக்குள்ளே…!
ஆத்திரம் கொள்ளாதே
நெஞ்சுக்குள்ளே...!
 
வாலாஜா ஜெ.அசேன், Ex.MLA.,

Monday 3 July 2023

மோடி அலையை சூறையாடிய ராகுல் சுனாமி!

சர்ச்சை செய்யவே 
நேர்ச்சை செய்துகொண்டு 
தமிழகம் வந்த கவர்னர்.

மக்கள் ஆட்சியின்
மாண்பிற்கு
கல்லறை
கட்ட நினைக்கும் 
கவர்னர். 
Govt. is of the people.., 
for the people.., 
by the people..! 
மக்களுடைய..,
மக்களுக்காக..
மக்களால்
நடத்தப்படுவது..!
மக்கள் ஆட்சிக்கு  
மகுடம் சூட்டிய 
வைர வரிகள்..!

ஆட்டுக்குத் தாடி
நாட்டுக்குக் ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌கவர்னர்
தேவையா என்ற
அறிஞர் அண்ணா எழுப்பிய கேள்வி 
மீண்டும் 
உயிர்ப்பிக்கப்படும் தேவை..!


அரசியல் அமைப்பை
பின்பற்ற வேண்டிய ஆளுநர்...
அமித்ஷா அமைப்பை
பின்பற்றுகின்ற அவலநிலை..!
கிண்டி ராஜ்பவனை
ஆர்.எஸ்.எஸ்ஸின்
விதைப் பண்ணையாக
மாற்றிவிட்டார்..!

திராவிடத் தென்றலை எதிர்த்து 
தீ ஜ்வாலையை கக்குகிறார்..!
சட்டமன்றத்தில் 
சண்டித்தனம் செய்து 
போகும் இடமெல்லாம்
புரியாத பொத்தல்களை
புதுமையெனப் புகழ்கின்றார்..!
தாய்ப்பாலில் 
கள்ளிப்பாலை
கசிய விடுகின்றார்..!

மொரிஷியஸ் to மோதானி
₹20 ஆயிரம் கோடி..
ஒன்றிய அரசின்
ஊழலின் உச்சத்தைப் பற்றி
ஓதிம மரம்போல் 
மௌனம் சாதிக்கும் ஆளுநர்..,
ஊழல் ஒழிப்பதாக 
அமைச்சர் பாலாஜியின்
உயிரோடு போராடுவது 
அவருடைய
புத்தி பேதலிப்பைக் காட்டுகிறது..!
நீக்குகிறார்...
நிறுத்துகிறார்...
கபடி ஆடுகிறார்..!

தமிழகம்...
தந்தை பெரியார்
பண்படுத்தி
பெருந் தலைவர் 
கல்விப் பயிர் வளர்த்து
பேரறிஞர்
சுயமரியாதை நீர்பாய்ச்சி 
கலைஞரின் பேனா உழுது
வார்த்தெடுத்த வீரத்தின்
விளைநிலம்..!
இங்கே
நாடோடிகளின்
நரித்தனத்திற்கு
இடமில்லை..!

ஏற்கனவே, 
மோடிஜியின் அலையை
ராகுல்ஜியின்
நடைப்பயண சுனாமி.., 
சூரையாடிவிட்டது..!

SO...
GO BACK GOVERNER..!
GO BACK GOVERNER RAVIJI..!

வாலாஜா ஜெ.அசேன் Ex MLA

Thursday 29 June 2023

நீரோ 2.0

நீரோ 2.0

இயற்கையின்
எழில் தோற்றம்
இந்தியாவின்
பெருமை சாற்றும்
மணிப்பூர் மண்ணில்
குருதி வெள்ளம்.
ஓயாத உள் மாநிலப் போர். 
பேயாட்சியின்
பின்விளைவு. 
அமைதி காக்க
மோடி முனையாமல்... 
அமெரிக்க  அரசின்
அழைப்பை ஏற்று
பறந்து போனார். 

மணிப்பூர் 
மதவாதிகளின் கொலைக்களமானது! 
மருந்துக்குக் கூட
மணிப்பூர் உயிர்களின் கவலையின்றி
வெள்ளை மாளிகை
விருந்து வைபவம்
பைடன்-ஜில் பைடன்
பறிமாற
மோடி பசியாறினார்.

ரோமாபுரி பற்றி எரியும்போது
நீரோ மன்னன்
பிடில் வாசித்த வரலாறு
நினைவலைகளில்
நீந்தி வந்தது! 
ஈன்ற தாயையே 
தூக்கில் தொங்கவிட்ட
நீரோவிடம்...
தாய் மடிப்பிச்சை கேட்டாள்... 

"I carried you in my womb
and nourished you with my blood"
என் கருவிலே
உன்னை சுமந்தேன், 
என் உதிரத்தால்
உன்னை வளர்த்தேன்
மகனே என மன்றாடினாள்.
நீரோவின் கல் மனம்
சரித்திரமானது!

இந்தியாவின் நீரோ
மோடியின் கல்மனம்
மட்டும் கரையுமா?
மறந்தார், 
மணிப்பூர் எரிதழலில்
வெந்து கரிவதை
மீண்டும் பறந்தார்!


எழிலரசி, புவியரசர்களை
விழி வீச்சில் வென்று
பித்தர்களாக்கி
துப்பட்டாவில் தொங்கவிட்டு
பாராண்ட  பைங்கிளி
கிளியோபாட்ரா
தன் அழகு வாகனத்தில்
உலா வந்த நைல் நதியின்
தென்றல் அலைகள்
தாலாட்டும்
எகிப்து நாட்டிற்கு!

அரபு பூமி
ஆரத் தழுவி
நைல் நதி தீரத்தின்
மிக உயரிய 
'ஆர்டர் ஆஃப் தி நைல்'
(Order of the Nile)
விருதினை வழங்கி
ஆனந்த கும்மி
இசைத்தது! 
விருந்தோம்பலின்
உச்சத்தை தொட்டது, 
உலகம் வியப்புடன்
உற்று நோக்கியது! 
காரணம்...
வஞ்சப் புகழ்ச்சி விருதா?

ஐ.நாவில்
வெளிச்சம் போட்ட
இந்திய ஜனநாயக
மரபணு... 
மணிப்பூரில்
வெந்தணலில்
வீழ்ந்து கிடப்பதை
இனியேனும் மோடி
காப்பாரா?
மௌனம் கலைப்பாரா?

வாலாஜா ஜெ.அசேன் Ex MLA

Saturday 24 June 2023

மோடிக்கு வாக்கப்பட்டதுக்கு நமக்கு இதுவும் வேணும்! இன்னமும் வேணும்!

அமெரிக்காவில் மோடி...

"கால்ல விழுந்து மோடியை வரவேற்ற அமெரிக்க அதிபர் பைடன்"

"சீனாவைத் தாக்க ஏவுகணை, ஸ்விட்ச்ச அழுத்துமாறு மோடியை கேட்டுக் கொண்ட அமெரிக்க ராணுவ படைத் தளபதி "

"டாலர நீங்க எடுத்துக்குங்க, விலைமதிப்பில்லாத ரூபாய எங்களுக்கு விட்டுக் கொடுங்க!" என அமெரிக்க நிதியமைச்சர் மோடியிடம் கதறல்"

"அமெரிக்காவிற்கு ஒரு நாள் அதிபராக இருக்குமாறு, முதல்வன் பட பாணியில் அமெரிக்க மக்கள் கை தட்டி, கரண்டி-தட்டை அடித்து மோடிக்கு கோரிக்கை"

படிக்கும் போதே நம்ம மண்ட மேல குண்டு 💣 வெடிச்சா மாதிரி இருக்குதா...?

இவை எல்லாம்,

மோடி அமெரிக்க பயணத்த வச்சு ரெண்டு ரூவா சங்கியானுக, பரப்பி உட எழுதி வச்ச தலைப்புகள்...

ஆனா நடந்தது...

அமெரிக்க நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவிக்க 75 அமெரிக்க எம்பிக்கள் முடிவு!

ஜனாதிபதி ஜோ பைடனுக்கு கடிதம் எழுதி போராட்டம் நடத்த எம்பிக்கள் முடிவு!

இது நடந்தா மோடி மானம், இந்தியா மானம் எல்லாம் அமெரிக்க நாடாளுமன்றத்துல ஆரம்பிச்சு உலக அளவுல கேவலப்பட்டுப் போகும்...

மோடிக்கு வாக்கப்பட்டதுக்கு நமக்கு இதுவும் வேணும்...

 இன்னமும் வேணும்...

வாலாஜா ஜெ.அசேன், Ex.MLA.,



Sunday 18 June 2023

தமிழரைப் பிரதமராக்குவோம்?-அமித்ஷா!

ஆட்சியின் உயிர் 
ஊசலாடும் நேரத்தில் 
உயில் அறிவிக்கிறார் அமித்ஷா!

ஏற்கனவே,
ஆட்சிக்கு உரியவரை 
அடையாளம் கண்டு 
கர்நாடக தேர்தல் களத்தில் 
ஒப்பந்தம் (Agreement) போட்டாகிவிட்டது.

வரும் 2024ல் 
பத்திரப்பதிவு செய்து 
பட்டா வழங்கப்பட உள்ள 
சொத்துக்கே சொந்தமில்லாத நேரத்தில் - அமித்ஷா 
உயில் அறிவிப்பது 
உலகமகா விந்தை!

வாலாஜா ஜெ. அசேன் Ex MLA



அமலாக்கத்துறை அகோரிகளின் பேயாட்டம்!

அமலாக்கத்துறை அகோரிகளின் பேயாட்டம்!

மணிப்பூரின் மரண ஓலம்-உலக ஊடகங்களில் ஒலித்த போதும்...
ஒரு வார்த்தையும் வெளியிடாத 
உரியவரின் மௌனம்?
மௌனங்களின் மகுடம்! 
கவனமெல்லாம்...
தலைவணங்காத் தமிழகத்தின் மீது!

விளைவு...

இ.பி.எஸ் அமைச்சரவையின் அங்கம்... 
செந்தில் பாலாஜி மீது-அன்று 
தொடரப்பட்ட வழக்கு
எட்டாண்டு கழித்து 
அவசர நடவடிக்கையாகப் பாய்கிறது!
இதய வலியால் தாக்குண்டவரை 
பிராண்டி எடுத்தது 
அகோரிகளின் பேயாட்டம்!

கர்நாடகாவில்,
தரைதட்டிப்போன கலத்தில் 
தஞ்சம் அடைந்திருந்தால்-செந்தில் புடம்போட்ட தங்கமென 
ஜொலித்திருப்பார்!

இருபதாயிரம் கோடி ரூபாய்...
மொரீசியசிலிருந்து அதானிக்கு...
(Mauritius to Adani) 
அதன் மர்மம்-அடைகாக்கப்படுவது...?
அமலாக்கத்துறை அகோரிகளின்
நினைவில் மறந்து போனதோ?
மௌனம் சாதித்தால் மாமனிதரோ?

மோடியின் கைத்தடிகள் 
'டாடி'யின் மகுடி இசைக்கு 
பாம்பாக மாறி-முதல்வர்
ஸ்டாலின் மீது சீறுகின்றன!
தன் ஆட்சியில் நடந்த தவறைத் 
தட்டிக் கேட்காமல்
முதல்வர் ஸ்டாலின் மீது-தற்போது பம்முகிறார் பழனிச்சாமி!

செந்தில் பாலாஜி மீது  
தொடரப்பட்ட வழக்குக்காக
ஸ்டாலின் பதறுவதாக 
இவர் கதறுகிறார்! 
இவரது ஆட்சியில் 
தலைமைச் செயலகத்தில் 
சோதனை நடந்தபோது-தன்னுடைய 
ஒன்பது வாசல்களையும் மூடிக்கொண்டு 
ஒடுங்கி உட்கார்ந்திருந்தார்!

ஆனால் ஸ்டாலினோ  
சிறைச் சாலையின் சிம்புட்பறவை 
சும்மா இருக்குமா? 
பதறி எழுந்து 
எதிரியை பதம் பார்த்தார்!

தரையில் தவழ்ந்து 
காலைப் பிடித்து 
அரியணை ஏறியவரல்ல,
களம் பல கண்டு 
காராகிரகத்தில் அடைபட்டு 
சங்கத் தமிழின் மங்காப் புகழுக்கு 
தங்க விளக்காகி 
அரியணை ஏறியவர்தான் 
முதல்வர் ஸ்டாலின்!

ஆம்... பதறினார்!
போர்ப் பரணி பாடினார்.. 
பேதைகளுக்கு-இதில் 
ஏன் உபாதை?

வாலாஜா ஜெ. அசேன் Ex. MLA.,




Thursday 8 June 2023

வாகை சூடுவாய் பொன்மகளே!

வாகை சூடுவாய் பொன்மகளே!

செங்கோலின்
ஓங்கார ஒலியில்
கரைந்து போனது
ஜனாதிபதியின்
புறக்கணிப்புச் செய்தி..! 

பெண்ணுரிமை பேணுவதாகப்
பிதற்றும் பிரதமர்
பட்டியலின மகளை,
பாராளுமன்ற விழாவில்
புறந்தள்ளிய செய்தி 
விஸ்வரூபம் எடுக்கா வண்ணம்
பாராளுமன்றத் திறப்பு விழாவை
செங்கோலின் 
ஜனன விழாவாக மாற்றி... 

சிறப்பும் செழுமையும் மிக்க
செங்கோலை செங்குச்சியாக்கி... 
அடிமை ஊடகங்களில்
அகடவிகட கச்சேரியை
அரங்கேற்றி... 
மக்களின் நினைவுகளில்
மறைக்கலாம்!

ஆனால்,
2024 தேர்தல் களத்தில்
பெண்ணுரிமை பறித்ததைப்
பழிவாங்க...
புதுயுகம் புலர... 
புயலென... 
பொங்குமா கடலென 
களமாடி...

"தேரா மன்னா 
செப்புவதுடையேன்" என
சீறி எழுந்து
மோடிஜியின்
முகமூடி கிழித்து... 
வாகை சூடுவாள்!
தங்கமகன் ராகுல்ஜீயின்
தங்கை பிரியங்கா காந்தி!

வாலாஜா ஜெ.அசேனா, Ex.MLA.,




Friday 2 June 2023

மோடியின் வீழ்ச்சியை செங்கோல் காக்குமா?

மக்கள் ஆட்சி மாள., 
மன்னர் ஆட்சி மீள.., 
செங்கோலின் கால்கோள் விழா..!

தற்புகழ்ச்சி தம்பட்ட மன்னன்-மோடிஜி 
சரிந்து விட்ட செல்வாக்கை சரி கட்ட... 
புதிய நாடாளுமன்றத்தில் 
பழைய செங்கோலின் 
புதிய அரங்கேற்றம்..!

தென்னாட்டு மண்ணில் 
தலைதெறிக்க ஓட விட்ட 
துயரக் காட்சியை 
துடைத்தெறிய துணையானதோ தமிழ்நாட்டுச் செங்கோல்?

அன்று 2004ல் 
அன்னை சோனியா காந்தி 
பிரதமராவதை எதிர்த்த
பாசிசக் கூட்டத்தை எதிர்த்து, 
சோனியா காந்திக்கு 
ஆதரவாகக் குரல் கொடுத்த 
லாலு பிரசாத் யாதவ் அவர்களையும்., 
இணை அமைச்சர் ஆர்.வேலு அவர்களையும் கடந்த 18-09-2004 அன்று 
வாலாஜாப்பேட்டைக்கு அழைத்து வந்து பிரம்மாண்டமான கூட்டத்தை நடத்தி 
லாலுவுக்குத் தங்கக் கிரீடம் சூட்டியதோடு 
தங்கச் செங்கோலும் வழங்கி 
கௌரவித்தோம்!
விளைவு... 

அரசியல் சித்தர் லாலுஜி, 
நிர்வாகத் சித்தர் ஆர்.வேலு ஆகியோரால் வாலாஜாபேட்டை இரயில் நிலையம் மறுமலர்ச்சி கண்டது!

ஆண்டுக்கு 
சுமார் ஒரு கோடியே இருபது லட்சம் ரூபாய் வருவாய் ஈட்டிக் கொண்டிருந்ததை மாற்றி 
சுமார் நாலு கோடி ரூபாய் வரை 
உயரும் அளவுக்கு 
இரயில் பயணிகளின் போக்குவரத்தை மிகைப் படுத்தினார்கள்!

புதிதாக, 
நகரி-திண்டிவனம் 
இணைப்புப் பாதைக்காக 
லாலுவும்-வேலுவும்
அன்று
திட்டம் தீட்டிச் செயல் படுத்தினார்கள்.

இடையில் ஆட்சி மாற்றம்,
மோடி பிரதமரானதால்-திட்டம் 
முன்னெடுக்கப் படாமல் 
முடங்கிப் போனது!

அன்று, 
வாலாஜாப்பேட்டையில் 
வழங்கப்பட்ட செங்கோலால் வளர்ச்சி!
இன்று, 
பாராளுமன்றத்தில் செங்கோல்!
மோடியின் வீழ்ச்சியை 
மறைக்கும் முயற்சி..!

வாலாஜா ஜெ. அசேன். Ex MLA


Friday 26 May 2023

நீதி வழுவினால் வளைந்து உயிர்குடிக்கும் தமிழ்ச் செங்கோல்..!

நீதி வழுவினால் 
வளைந்து உயிர் குடிக்கும் 
தமிழ்ச் செங்கோல்..!

மன்னர் ஆட்சியின் மாட்சிமைக்கு
அடையாளம்‌ செங்கோல்..!
ஆங்கிலேய மன்னர்களிடமிருந்து
அடிமை விலங்கொடித்து-நமது 
பாரத தேசம் சுதந்திரம் பெற்று
மக்களாட்சி மலர்ந்தது..!

ஆட்சி மாற்ற நினைவாக
குல்லுபட்டர் ராஜாஜியின் 
ஆலோசனைப்படி
மௌண்ட்பேட்டன் பிரபு மூலமாக
உம்மிடி பங்காரு செட்டியின் நகைக்கடையில்
தயாரித்து வழங்கப்பட்டதுதான்
இந்தச் செங்கோல்.
இது சோழர்காலத்து
செங்கோல் அல்ல..!

அப்போதையப் பிரதமராக இருந்த
நமது நேருபிரான்
மக்கள் ஆட்சி மலர்ந்த பிறகு
மன்னராட்சி தேவையில்லையென
அந்தச் செங்கோலை அலகாபாத்
அருங்காட்சியகத்தில்
காட்சிப் பொருளாக்கினார்.

மன்னர்களையும்
மன்னர்களுக்கு வழங்கப்பட்ட மானியத்தையும்
காங்கிரஸ் பேரியக்கம் 
ஒழித்தது என்பதை 
நமது தேசமே அறியும்..!

தற்போது 
தன்னை அறிவிக்கப்படாத மன்னராக
தன்னை தனக்குள் நினைத்துக் கொண்டுள்ள
நரேந்திர மோடிஜி
அரசியல் சட்டத்தை அப்பட்டமாக
அடிக்கடி மீறுவதன் மூலம்
வெளிப்படுத்தியுள்ளார்.

நமது அரசியலமைப்பின்படி
ஜனாதிபதியே முதல் குடிமகன்.
பாராளுமன்றக் கட்டடத் திறப்பு விழாவிற்கு அவரை அழைக்காமல் 
இருப்பதுவும் அதற்குச் சான்று.
அடிக்கல் நாட்டுவதும் அவரே...
துவக்கி வைப்பதும் அவரே...
இப்படி எல்லாமுமாகி
நிற்கவேண்டுமென 
விரும்புவதன்மூலம்
தன்னை மன்னராக
வெளிப்படுத்திக் கொள்கிறார்.

நீதி வழுவாத ஆட்சியின்
சின்னம் செங்கோல்.
கற்புக்கடம் பூண்ட பொற்புடைய
தெய்வம் கண்ணகியின் வழக்கில்...
நீதி தவறி செங்கோல்
வளைந்ததை உணர்ந்த
பாண்டிய நெடுஞ்செழியன்...
யானோ அரசன்.? யானே கள்வன்...!
எனக்கூறி‌ சிம்மாசனத்திலிருந்து
கீழே விழுந்து உயிரைத் துறந்தான்.

பாராளுமன்றத்தில் 
செங்கோலை பதிக்கப்பட்ட பிறகு நடைபெறுகின்ற
பாராளுமன்ற விவாதங்களில்
துணிச்சல் மிக்க தும்பி
மக்களின் மனங்கவர்ந்த நல் நம்பி
ராகுல் காந்தி அவர்கள் 
20 ஆயிரம் கோடி 
அதானி கணக்கில் வந்தது எப்படி 
என வழக்குத் தொடர்ந்து
நீதி நிரூபிக்கப்பட்டால்-மோடிஜி 
பாண்டிய நெடுஞ்செழியனைப் பின்பற்றுவாரா..!

வாலாஜா ஜெ.அசேன். Ex MLA.,


Monday 22 May 2023

கர்நாடகத் தேர்தலில் விலை போகாத ரூபாய் 2000!

கர்நாடக தேர்தல்
களத்தில் ₹ 2000 
கைமாறினால்
கரை சேருவோமென
கொட்டி இறைத்து..,
பெட்டி காலியானதே
ஆட்சியும் பறிபோனதே...
₹ 2 ஆயிரத்தால் வாக்கை
வாங்க முடியவில்லை
என்றால்...
நாட்டில் ₹ 2 ஆயிரத்தின்
நடமாட்டம் எதற்கு.?
நம் மதிப்பே
போனபிறகு பணத்திற்கு
மதிப்பெதற்கு..?!
செய்தாரே மறுபடியும்
தில்லாலங்கடி வேலை..!

வாலாஜா ஜெ.அசேன் Ex MLA





Thursday 11 May 2023

இதுதான் இன்றைய வாலாஜாப்பேட்டை..!

வாலாஜாவில் 
துப்பாக்கிகளின் துரைத்தனம்..!

துப்பாக்கி 1

தூண்டில் போட்டால்தான்
மீன் கிடைக்கும்...
துப்பாக்கிக் காட்டினாலும்
மீன் கிடைக்கணும்..!
மீறினால்...
'துப்பாக்கி'க்குத்
துணைபோகும் நகராட்சியின்
நோட்டீஸ் கிடைக்கும்..!

ஏழை மீன் வியாபாரிகள்
துப்பாக்கிகளின் துரைத்தனத்தால்
படும் துயரம்
சொல்லி மாளாது...!

படிப்பது இராமாயணம்
இடிப்பதோ பெருமாள் கோயில்
என்பார்கள்..!

உதடுகள் உச்சரிக்கும்.. ராம நாமம்.,
ஆனால்., ராமர் கோயில் 
குளத்தை அபகரித்து
மாடிவீடு கட்டிக் கொள்ளும்
'துப்பாக்கி' மோகனம்..!

நீர்நிலைகள் ஆக்கிரமிப்பை அகற்ற‌,
அரசு சொல்லும்... 
ஆனால்...
ஆணையாளர்களே
வர அஞ்சும்
வாலாஜா நகராட்சிக்கு
கமிஷன் பணம் 
கணக்கெடுத்து 
பங்கு போடவே நேரமில்லை..!
இதில் ஆக்கிரமிப்பாவது
மண்ணாங்கட்டியாவது..!

அறிவிக்கப்பட்டது
பேருந்து நிலைய விஸ்தரிப்பு...
மதிப்பீடு ரூ.இரண்டு கோடியே எட்டு இலட்சம் (₹208 இலட்சங்கள்)
கட்டப்படுவதோ...
10×10 பதினெட்டு
கடைகள் மட்டுமே..!
பேருந்து நிலைய விஸ்தரிப்பா
அல்லது கடைகள் விஸ்தரிப்பா
புரியவில்லை...?
மொத்தத்தில் ஆளாளின்
விஸ்தரிப்புக்கு  ரூ.91,000/=..!
(அதானிக்குக் கிடைத்த 
இருபதாயிரம்
கோடிகளைப் போல...)

பகல் கொள்ளையா?
பஸ் ஸ்டாண்டு, கொள்ளையா?
மயானக் கொல்லையில்
மரணப் படுக்கை
விரியும் வேளையில்
மண் உண்ணும் உன் உடலை
கமிஷன் பணம் காக்குமா..?

துப்பாக்கி 2

துப்பாக்கி போலீஸ்
துணையுடன்
புளூமெட்டலின்
புல்லட் கிளப்பும் புழுதியில்
கஞ்சா, காட்டன்,
வயிற்றில் மருந்தெடுக்கும்
மசாலா வைத்தியர்கள்,
கட்டப் பஞ்சாயத்து,
கல் குவாரிகள் என
எல்லாம் கதிகலங்கும்...
கட்டாய வசூல் வேட்டை..!
இதுதான் இன்றைய 
வாலாஜாப்பேட்டை..!

விரைவில்...
மாலைநேர மக்கள் சந்திப்பு..!

வாலாஜா ஜெ.அசேன் Ex.MLA.,



கர்நாடகத்தில் கனன்று கொண்டிருக்கும் எரிமலை!

கர்நாடகத்தில் கனன்று கொண்டிருக்கும் எரிமலை!
வெடிக்கும் நாள் மே 10!
           
ஆசாடபூதிகளிடத்தில் அதிகார‌ம்
அர்த்தமற்ற சட்டங்களால்
மக்கள்படும் துயரம்..!

எட்டாண்டுகள் எள்ளளவு
வளர்ச்சியில்லாமல்
கண்டதற்கெல்லாம்
வரி வரியென வாரிச் சுருட்டி
நெறிகெட்ட முதலாளி
வர்க்கத்தை வளர்த்து
கூடாநட்பு கேடாய் முடிந்ததால்...

நரேந்திரர் 
கர்நாடக வீதியில்
தப்பட்டையடித்து 
அலையும் அவலக் காட்சி..!

பிரதமர்களால் பாரதம்
பெருமையும், பொலிவும் 
பெற்றது அந்தக் காலம்..!
நரேந்திரரின்  "நா" நடத்தும்
பொய் நர்த்தனத்தால்
நாடு தலைகுனிந்தது இந்தக்காலம்‌..!

அன்று...
பொய்களின் பிதாமகன் *ஹிட்லர்*
இன்றோ...
பொய்களின் தலைமகன் *சாய்வாலா பட்லர்*..!

இந்த லட்சணத்தில்...
மன்கிபாத்திற்கு நூறுநாள் வெற்றிவிழா..!
திரைப்படங்களே நூறுநாள் ஓடுவதில்லை...
ஓட்டுவார்கள்..!
ஓடாத மன்கிபாத்தை ஓட்டி
விளம்பரவிழா..!

2014ல்...
மத உணர்வுகளின் 
மயக்கம் தந்த வெற்றி..!

2019ல்...
மண்ணைக் காக்கும் மாவீரர்கள் 
புல்வாமா மண்ணில்
மரணித்த தியாகத்தால்
தக்கவைத்த வெற்றி..!

2024ல்...
எந்த முயற்சியாலும் முடியவே
முடியாது..!

காரணம்...
2023ல் 
கர்நாடக மக்கள் 
வருங்கால பாரதத்தை புனரமைக்க
கங்கணம் கட்டிக் கொண்டார்கள்..!

மனக் கொதிப்பு சூறாவளியாக சுழன்று...
எரிமலையாய்க் குமுறிக் கொண்டுள்ள மக்களின் மன்கிபாத் வெடிக்கும் நாள்தான் மே10..!

அந்த நாள் மறுக்கப்பட்ட
செங்கோட்டையின் ராஜபாட்டையில் 
மங்காப் புகழ் கொண்ட
நேரு பரம்பரையின் தங்கத் தவப் புதல்வன்...
இராகுல் காந்தியின் வெற்றிப் பயணத்துக்கு முன் அனுமதி பட்டயம் வழங்கும் பொன் நாள்..!

அந்நாள் இனிய நாள்..!
கர்நாடகத் தாயைப் போற்றுவோம்..!

வாலாஜா ஜெ.அசேன், Ex. MLA.,



Sunday 30 April 2023

குருக்ஷேத்திர யுத்தத்தின் முன்னோட்டம்தான் கர்நாடகத் தேர்தல்!

 2024 இல் நடக்கப் போகும் குருக்ஷேத்திர யுத்தத்தின் முன்னோட்டம்தான் கர்நாடக தேர்தல்!

நள்ளிரவில் நாட்டுக்கு  விடுதலை..!
சுதந்திர இந்தியாவின் கையில் பிச்சைப் பாத்திரம்..!

அன்று,
கோமான் நேருமகான்
நெஞ்சில் பூத்த திட்டங்களால் இந்தியா பெற்றது அட்ஷயப் பாத்திரம்!
இந்தியத் தீபகற்பத்தின் வளர்ச்சியை உலகமே வியந்து பார்த்தது!

இன்று...
மதவெறி போதையூட்டி
பதவி போகத்தில் புரளும் ஒரு கூட்டம் நம்மை
அடிமையாக்கிவிட்டது!

'பேய் ஆட்சி செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள்' என்ற பொய்யாமொழிக்கு புகலிடமாக்கிவிட்டது!

கொலைக் குற்றவாளிகளுக்கு விடுதலை...
கற்பைச் சூறையாடியவர்களுக்கு விடுதலை...
வங்கி மோசடியாளர்களுக்கு விடுதலை...

₹20,000 கோடி மறக்க முடியுமா..!
கொள்ளையர்களை அடையாளம் காட்டியவருக்கு மட்டும் சிறைச்சாலை...

விநோதம்... விநோதம்... இதுதானோ கூர்ஜ்ஜரத்தின் நீதி...
பாரதத்தின் மேல் படர்ந்திருக்கும் அழியாப் பழி..!

ஆண்டப் பரம்பரையடா..!
விடுதலை வேள்வியில்
மாண்ட பரம்பரையடா..
அடங்கிக் கிடப்பதோ..?
அறிவீனம்... அறிவீனம்..!

தியாகத்தின் தாயகம் தேசிய காங்கிரஸ் அல்லவோ..!

தோளை உயர்த்தடா...
தியாகப் பரம்பரை வழிவந்த
நம் தலைவன் ராகுலை வாழ்த்தடா!

உரிமை இழந்து ஊழியம் செய்து வாழ்வதைவிட உயிரைக் கொடுப்போம்..!
கர்நாடகம் அழைக்கிறது வா..!

களம் காண்போம்..! கர்நாடகத்தை மீட்டெடுப்போம்..!
வெற்றிவாகை சூடுவோம்..!

2024 குருக்ஷேத்திர
யுத்தத்திற்கு முன்னுரை வரைவோம்!
வா... வா... வா..!

வாலாஜா ஜெ.அசேன், Ex. MLA,



Friday 7 April 2023

இராகுல் காந்தியைப் பழி வாங்கும் மோடி அரசைக் கண்டித்து வாலாஜாப்பேட்டையில் பொதுக்கூட்டம்

ஹிண்டன்பர்க் அறிக்கையைத் தொடர்ந்து, அதானி-மோடி இருவரின் கள்ளக் கூட்டு குறித்தும், ஷெல் கம்பெனிகளில் அதானி பெயரில் குவிந்து கிடக்கும் 20 ஆயிரம் கோடி ரூபாய் யாருடையது என்றும் அடுத்தடுத்து கேள்விகள் எழுப்பிய இராகுல் காந்தி அவர்களுக்கு சிறை தண்டனை விதித்தும், எம்பி பதவியைப் பறித்தும் பழி வாங்கும் மோடி அரசின் ஜனநாயகப் படுகொலையைக் கண்டித்து, வாலாஜாபேட்டை இராகுல் காந்தி பாசறை சார்பில் வாலாஜாபேட்டை பேருந்து நிலையத்தில் 07.04.2023 வெள்ளிக்கிழமை மாலை மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது

நாவுக்கரசர் நாஞ்சில் சம்பத் அவர்கள் இந்த பொதுக்கூட்டத்தில் சிறப்புரை ஆற்றினார். மேலும் இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வாலாஜா ஜெ.அசேன், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கோடீஸ்வரன், பூக்கடை மணி, நியாஸ், தீனா, உத்தமன், மற்றும் பேராசிரியர் அன்பு, மனித உரிமை செயல்பாட்டாளர் வழக்கறிஞர் பொன்.சேகர் ஆகியோர் கண்டன உரை ஆற்றினர்.
 
இந்தப் பொதுக்கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.




தீர்மானம்
-1
 
ஹிண்டன்பர்க் அறிக்கையைத் தொடர்ந்து, அதானி-மோடி இருவரின் கள்ளக் கூட்டு குறித்தும், ஷெல் கம்பெனிகளில் அதானி பெயரில் குவிந்து கிடக்கும் 20 ஆயிரம் கோடி ரூபாய் யாருடையது என்பது குறித்தும் இராகுல் காந்தி அவர்கள்

தொடுத்தக் கேள்விக் கணைகளால் பதில் சொல்ல முடியாமல் விழி பிதுங்கி நிற்கிறது மோடி அரசு. இராகுல் காந்தி அவர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்ல திராணியற்ற மோடி அரசு, பழைய வழக்கு ஒன்றை தூசு தட்டி, இராகுல் காந்தி அவர்களுக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதித்து, அவரது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைப் பறித்து, அவர் குடியிருந்த அரசு குடியிருப்பையும் காலி செய்யச் சொல்லி பழி வாங்கி வருகிறது மோடி அரசு. இது பாரம்பரியமான நேரு குடும்பத்தின் மீதான தாக்குதல் மட்டுமல்ல, அரசின் நடவடிக்கைகளை எதிர்த்துக் கேள்வி எழுப்புகின்ற கருத்துரிமையைப் பறிக்கும் ஜனநாயக விரோத பாசிச நடவடிக்கையாகும்.
 
இளம் தலைவர் இராகுல் காந்தி அவர்களுக்கு எதிரான மோடி அரசின் பழிவாங்கும் நடவடிக்கையை, வாலாஜாபேட்டை, “இராகுல் காந்தி பாசறை” இந்தப் பொதுக் கூட்டத்தின் வாயிலாக மிக வன்மையாகக் கண்டிக்கிறது.
 
தீர்மானம் - 2
 
மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வை கட்டாயமாக்கிய பிறகு தமிழ்நாடு கிராமப்புற மற்றும் ஏழை எளிய மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் இடம் பிடிப்பதற்கு மிகவும் சொல்லொன்னாத் துயரங்களை அனுபவித்து வருகின்றனர். அனிதாவைத் தொடர்ந்து எண்ணற்ற மாணவர்கள் தற்கொலைக்குத் தள்ளப்படுகின்றனர். மாணவர்களின் உயிர்காக்க வேண்டி, நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு ஏகமனதாக தீர்மானம் ஒன்றை நிறைவேற்றி நடுவண் அரசுக்கு அனுப்பி வைத்தது.
 
நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்ற தமிழ்நாடு அரசின் கோரிக்கையை புறந்தள்ளி வரும் மோடி அரசை வாலாஜாபேட்டை, “இராகுல் காந்தி பாசறை” இந்தப் பொதுக் கூட்டத்தின் வாயிலாக மிக வன்மையாகக் கண்டிக்கிறது.
 
தீர்மானம்-3
 
ஆன்லைன் ரம்மி விளையாட்டில் சிக்கிக் கொண்டு, பணத்தை இழந்து எண்ணற்ற தமிழ்நாட்டு இளைஞர்கள் தற்கொலை செய்து வருகின்றனர். எனவே இளைஞர்களின் தற்கொலையை தடுத்து நிறுத்தும் வகையில் ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்ய வேண்டும் எனக் கோரி ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு ஏகமனதாக தீர்மானம் ஒன்றை நிறைவேற்றி ஆளுநர் ரவிக்கு அனுப்பி வைத்துள்ளது.
 
ஆனால், ஆன்லைன் ரம்மி விளையாட்டைத் தடை செய்யக் கோரும் தீர்மானத்தை நடுவண் அரசுக்கு அனுப்பி வைக்காமல் கிடப்பில் போட்டுள்ளார் ஆளுநர் ரவி.
 
"சரியான காரணமின்றி ஆளுநர் ஒரு மசோதாவைத் தடுத்து நிறுத்தினால், அது நாட்டில் ஜனநாயகம் இறந்து விட்டதாகப் பொருள்படும்"
 
ஆன்லைன் ரம்மி விளையாட்டைத் தடை செய்யக் கோரும் தமிழ்நாடு அரசின் தீர்மானத்தைக் கிடப்பில் போடும் ஆளுநர் ரவியை, வாலாஜாபேட்டை, “இராகுல் காந்தி பாசறை” இந்தப் பொதுக் கூட்டத்தின் வாயிலாக மிக வன்மையாகக் கண்டிக்கிறது.




 

Thursday 6 April 2023

CBI வைர விழாவில்…. மோடிஜியின் இதழ்கள் உதிர்த்த முத்துக்கள்!

"ஜனநாயகம் மற்றும் நீதிக்கு, 
ஊழல் மிகப் பெரியத் தடையாக உள்ளது. 
ஊழலிலிருந்து நாட்டை விடுவிப்பதே
மிக முக்கியக் கடமை!" – மோடி

இது,
BJP ஆட்சியில், ஊழலை ஒழிக்க 
முடியவில்லை…என்பதற்கான
மோடிஜியின், ஒப்புதல் வாக்குமூலம்!

ஆட்சிக்கட்டிலில் ஒன்பதாண்டுகள்,
ஊஞ்சலில் ஆடி…., உய்யலாலா பாடி..
எதிர்க்கட்சிக்கார்களைப் பழி … வாங்கி 
உலகம் முழுவதும் ஒய்யார பவனி 
நடத்திய பிறகு….,ஊழல் குறித்து….
உதித்ததோ ஞானோதயம்….மோடிஜிக்கு?

”அம்பானி பணம் 
20 000 கோடி ரூபாயின்
நதி மூலம், ரிஷி மூலம் யாதோ?”
என,
இராகுல் காந்தி தொடுத்தக் 
கேள்விக் கனைகளால் விழி பிதுங்கி 
அம்மணமாய்…அம்பலமான பிறகு
மோடிஜி மீதே …
ஊழல் மேகம் குடை பிடிக்கிறது!


“மங்கை சூதானால் கங்கையில் குளிக்கலாம்…. 
ஆனால், 
அந்தக் கங்கையே சூதானால்….?”
காரைக்குடி கவிஞனுக்கு 
உங்கள் பதில்தான் என்ன?


மன்கிபாத்… எனும் பயனில்லாப் பேச்சு!
அது…மக்களுக்கோ புரிஞ்சு போச்சு
நீங்கள் 
மூட்டை கட்டும் காலம் வந்தாச்சு!
”விடியுமா?” என்பதே
இன்றைய மக்களின் 
ஏக்கப் பெருமூச்சு!

ஊழலிலிருந்து….நாட்டை மீட்க
ஆட்சிக் கட்டிலிலிருந்து…மோடியை அகற்ற 
வேண்டும் என்பதே…மக்களின் 
ஏகோபித்தப் பேச்சு!

வாலாஜா ஜெ.அசேன், Ex.MLA.,

Wednesday 5 April 2023

இராணிப்பேட்டையில் முற்றுகைப் போராட்டம்: காங்கிரசார் கைது!

ஹிண்டன்பர்க் அறிக்கையைத் தொடர்ந்து அதானிக்கும் மோடிக்கும் இடையிலான கள்ள உறவு மற்றும் நிதி மோசடி குறித்து கேள்வி எழுப்பிய இராகுல் காந்தியைப் பழிவாங்கும் பாஜக அரசைக் கண்டித்து, இராகுல் காந்தி பாசறையைச் சேர்ந்த காங்கிரசார், இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை 05.04.2023 அன்று காலை 11.00 மணி அளவில் முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வாலாஜா ஜெ.அசேன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் மனித உரிமைகள் பிரிவு மாநில துணைத் தலைவர் கோடீஸ்வரன், காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினர்கள் நியாஸ், சசிகுமார், இராணிப்பேட்டை நகர மன்ற உறுப்பினர் முருகன், வாலாஜா நகர காங்கிரஸ் தலைவர் பூக்கடை மணி, காங்கிரஸ் மனித உரிமைகள் பிரிவு இராணிப்பேட்டை மாவட்டத் தலைவர் ஜானகிராமன், இராணிப்பேட்டை நகர காங்கிரஸ் தலைவர் உத்தமன் உள்ளிட்ட 25 பெண்கள் உட்பட சுமார் 130 பேர் தமிழ்நாடு காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு ஒரு திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டுள்ளனர்.