Wednesday 30 August 2023

களவாடப்பட்ட கடின உழைப்பு!

களவாடப்பட்ட கடின உழைப்பு!


அன்று...
விண்ணோடும் 
முகிலோடும்
விளையாடும்
வெண்ணிலவே..!

இன்று...
விண்ணோடும், 
விஞ்ஞான சந்திராயனோடும்
இசைந்தாடும்
பால் நிலவே..!

உன்னில், 
'பாட்டி வடை சுட்ட கதை'
பழமையானது..!
ஆனால்...

உன்னை வைத்து
தாத்தா சுடும் வடையோ...
வகை வகையானது..!

சாதனையை 
வார்த்தெடுக்க உழைத்தவனுக்கு
கைத்தட்டல் மட்டுமே
கதையானது..!

ஊர் சுற்றும் உல்லாசிக்கு
விண்ணளவு
பாராட்டானது..!

இஸ்ரோ அணியின் உழைப்பு
களவாடப்படும்
விந்தையானது..!


1962 இல்...
இந்தியப் பொருளாதாரத்தின்
இருண்ட காலம்., 
அது
இஸ்ரோ கண்விழித்த நேரம்...

வறுத்தெடுத்த
வறுமையின் வேரை
அறுத்தெறிந்த
அருந்தவப் புதல்வன் 
நேருபிரான்..,

விக்ரம் சாராபாய்
மற்றும் 
ஹோமி பாபாவின்
துணையுடன்
விண்வெளி
ஆய்வுக் களத்தை
வடிவமைத்தார்..!

ஆரியபட்டா துவங்கி
சந்திராயன் 3 வரை
மண்ணிலிருந்து
விண்ணோக்கிப் பாய்ந்த
அக்னிச் சிறகுகள்
அனைத்தும் - அன்று 
நேரு விதைத்த
விதையின்
விருட்சங்களாகும்..!

மதம் பார்த்து
மகுடம் சூட்டப்பட்ட
மாமனிதர் போடும்
சதிராட்டமோ.., 
வேதனையானது..!

அங்கே
வானத்து நிலவில்
சந்திராயனின்
ஆராய்ச்சி..,

இங்கே 
வானவில்லின்
உச்ச நட்சத்திரத்தின்
பாத சரண
ஆராய்ச்சி...

பதவி போதையில்..,
இரத்த வெள்ளத்தில்
குளிர்ச்சியைக் காண்பவன்.,
புல்டோசரைக் கொண்டு
எளிய மக்களின் வசிப்பிடங்களையும்
இடித்து மகிழ்பவன்.,
காவலர் பாதுகாப்பில்
விசாரணைக் கைதிகளை
சுட்டுக் கொல்லும் அநீதியை
நீதியாக்குபவன்தான்
சந்நியாசி - என
கண்டுபிடிப்பு..!

தமிழ் அகராதியிலோ..,
தினம் தினம்
இரந்து உண்பவன்,
முற்றும் துறந்தவன்தான்
சந்நியாசி..!

விஞ்ஞானத்தை
சந்தைப் பொருளாக்கி..,
பித்தலாட்டமாய்
விளம்பரம் தேடும்
விந்தை மனிதர்களை
வீழ்த்த..,

பெரியாரின்
புரட்சி வெடிக்கும் காலம்
வெகு தொலைவில் இல்லை..!

வாலாஜா ஜெ.அசேன் Ex MLA

Sunday 13 August 2023

பஞ்சாயத்தில் வடிவேல் ஜி! பார்லிமென்ட்டில் மோடிஜி!


பஞ்சாயத்தில் வடிவேல் ஜி!
பார்லிமென்ட்டில் மோடிஜி!

மணிப்பூரின்
மகரந்த பூமியில் 
கந்தகச் சாரல்..!
வீதியெங்கும்
வெடிச் சத்தம்..!

நங்கையரை 
நிர்வாணப்படுத்தி 
நகர்வலமாய்
அலையவைத்து..,
வல்லுறவில் சிதைத்து 
சீரழிக்கும் 
கும்பல்களின் 
கொடிய பேயாட்டம்..!

நாதியற்று போனதடா
மணிப்பூர் மாநிலம்..!

தாயக மண்ணில் 
அகதியாக..,
கொடுங்கோல் ஆட்சியில்
கடுங்காடுகளில்
மக்களின் வனவாசம்..!

ஆணாதிக்கத்தால்
அஞ்சும் வஞ்சியர்..,
மியான்மர் நாட்டில்
தஞ்சம் தேடும் 
அவலம்..!

அபயம் தரவேண்டிய 
ஆட்சியாளர்கள் 
உபயோகமற்றுப்
போனதால்..,

உச்சநீதிமன்றமே 
கலவரத்தை அடக்க 
மேற்கொண்ட
முயற்சிக்குப் பிறகும்..,

நாட்டை ஆளும் பிரதமர்
எதிர்வரும் 
சுதந்திர தின விழாவிற்கு 
தனக்கான 
ஆடை அலங்காரத்
தேர்வின் கனவில்
ஆழ்ந்து இருப்பதால்
எதிர்கட்சிகள்
நம்பிக்கையில்லாத் தீர்மான 
அம்புகள் தொடுத்தனர்..!

நீண்ட முயற்சிக்குப் பின்
நாடாளுமன்றத்தில் விவாதம்..!

வராதவர் வந்தார்..,
வாய்ச் சவடாலை
அவிழ்த்து விட்டார்..!
எதிர்க் கட்சிகள் எழுப்பிய 
எந்தக் கேள்விக்கும்
பதில் இல்லை..!

மாறாக...
மணிப்பூர் கலவரத்துக்கு
ஜவகர்லால் நேருவே
காரணம் என்றார்..!

உடைந்து 
உருக் குலைந்து இருந்த 
இந்தியாவை மீட்டு 
உருவம் கொடுத்து..,
அவர் கபாலத்தில் 
கசிந்த திட்டங்களால்தான்
இந்தியா இன்றளவும் 
இயங்கிக் கொண்டுள்ளதை
மறந்து..,

வாய்க் கொழுப்பால்
வக்கணை பேசினார்..!
குடும்ப அரசியல் என
குதியாட்டம் போட்டு 
விடுதலை வேள்வியில் 
வெங்கொடுமைச் சிறைச்சாலையில் 
வாடிய குடும்பத்தைப்
பரிகசித்தார்..!

மொத்தமாக
நையாண்டி மேளம் 
கொட்டினார்..!

துயரம் கவ்விய 
மணிப்பூரின் விடியலுக்கு 
விடை காணாமல்..,

"ஏம்ப்பா கையப் புடிச்சு
இழுத்தியா"?
எனும்...
வடிவேலு நகைச்சுவையின் 
பாணியில்
பாராளுமன்றத்தில் 
தன் நிலையை 
வெளிப்படுத்தினார்..!

பாவம்
எதிர்க் கட்சியினர்..,
கல்லுளி மங்கனை
எதிர்த்து 
வெளிநடப்பு செய்தனர்..!

மணிப்பூரின் துயரம் 
தொடர் கதைதானா..?
விடியாதோ..?!

வாலாஜா ஜெ.அசேன் Ex MLA

Wednesday 9 August 2023

2024 தேர்தல் களத்தில், பாடப் போவது அடிமை கீதமா? விடுதலை கீதமா?

2024 தேர்தல் களத்தில்...
பாடப்போவது
அடிமை கீதமா? விடுதலை கீதமா?

*****


அழிக்க நினைப்பவரின் 
பாதார விந்தங்களுக்கு 
பணிவிடை செய்யும் 
ஈபிஎஸ் ஓபிஎஸ்..!
தகுதியான தலைமையின்றி
தண்ணீரில் தாமரையாக 
தள்ளாடும் தலைவர்களால் 
தற்கொலை வழியில் அதிமுக..!

1984 இல்
மக்கள் தலைவர் *எம்ஜிஆர்*
மரணப்படுக்கையில் விழுந்த போது
அன்றைய இந்தியப் பிரதமர் 
அன்னை இந்திரா காந்தி
அப்பல்லோ மருத்துவமனைக்கு
பறந்து வந்து..,
மருத்துவர்களின் ஆலோசனை பெற்று 
விமான ஆம்புலன்ஸில்
அமெரிக்க பரூக்ளின் 
மருத்துமனைக்கு அனுப்பியதால்
அன்று
எம்ஜிஆர் உயிர் பிழைத்தார்..!

1987 இல்
எம்ஜிஆர் மரணித்த பின் 
"ஜா" , "ஜெ" என உடைந்த 
அதிமுகவை ஒன்றிணைத்து 
ஜெ வை முதல்வராக்கியது
காங்கிரஸ் பேரியக்கம்..!

2016 இல்
அயர்ன் லேடியாக
வர்ணிக்கப்பட்ட ஜெயலலிதா 
உயிருக்குப் போராடிய நிலையில் இருந்தபோது..,
பிரதமர் நரேந்திர மோடி 
அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்து ஜெயலலிதாவை 
வெளிநாட்டு மருத்துவம் 
பெற அனுப்பி இருந்தால்...
ஒரு வேளை ஜெயலலிதா
பிழைத்திருக்கக் கூடும்.

மாறாக...
அதிமுக-வின் தலைமையில்
வெற்றிடம் ஏற்பட்டால் 
பாஜக-வைக் கொண்டு 
நிரப்பலாம் என்று
மனப்பால் கொண்டார்.‌.
ஜெயலலிதாவின் மரணத்திற்கு பின்
பார்வையாளராக 
பக்குவமாக வந்து 
அதிமுக-வில் பிளவு
காண வைத்தார்..!
அதிமுகவின் அடி நாதத்திற்கு 
அமித்ஷா ஆதார
புருஷனானார்..!

சுய சிந்தனை இழந்த அதிமுக 
இரண்டு பட்டு
தமிழக அரசியலில் 
இரண்டாம் இடத்தை
பாஜகவிற்கு 
தாரைவார்க்கும் அவலநிலை..!

மாநிலங்களவையில் 
பாஜகவின்
'டெல்லி அதிகார 
குறைப்பு மசோதா'விற்கு 
ஆதரவுக்கரம் நீட்டி
அடிமை சாசனத்தை 
அறிவித்துவிட்டது
அடிமைகள் கூட்டம்..!

தலைசிறந்த 
அரசியல் ஆளுமையான 
எம்ஜியாரால் துவக்கப்பட்டு 
தன்னிகரில்லா தைரிய மங்கை ஜெயலலிதாவால்
கட்டிக் காக்கப்பட்டு 
வளர்ந்தது அதிமுக..!

எந்த ஜெயலலிதாவால் 
*மோடியா-லேடியா* என
சவால் விட்டு 
ஜெயலலிதாவால் 
தோற்கடிக்கப்பட்ட
மோடியின் காலில் 
அதிமுக-வை சரணடைய வைத்திருப்பது..,
எம்ஜியாருக்கும், 
ஜெயலலிதாவிற்கும் - செய்யும் 
மாபெரும் துரோகமாகும்..!

இதயத் துடிப்பில் ஒலிக்கும் 
லப்டப் லப்டப் ஓசையில் 
எம்ஜிஆர், ஜெயலலிதா
எம்ஜிஆர், ஜெயலலிதா...
என்ற துடிப்பாக உணர்ந்து 
மகிழும் தொண்டனே...
2024 தேர்தல் களத்தில்....
நீ பாடப் போவது
அடிமை கீதமா..?!
விடுதலை கீதமா..?!
முடிவு செய்..!

வாலாஜா ஜெ.அசேன் Ex MLA

Friday 4 August 2023

படமல்ல...தடுப்பில்லா துயர வெள்ளம்!

படமல்ல...தடுப்பில்லா

துயர வெள்ளம்..!

துயரத்தில் துவண்டு

தலைகவிழ்ந்த சிறுமிக்கு 

தலைவனின் ஆறுதல்

அணைப்பு..! தேறுதல்

வார்த்தைகள்..!


இழப்பை...

வார்த்தையால் அல்ல...

விழிகளின் ஓரத்தில்

கசியும் கண்ணீரால்

துயரக் கதையை

உணர்த்திவிட்ட சிறுமி..!


இது ஒரு படம் மட்டுமல்ல...

நூற்றுக்கணக்கான

படங்கள் பதிவிடப்படாமல்

புதைந்து போய்விட்டன..!


தலைகவிழ்ந்தது

சிறுமியல்ல...

உலகின் முன்

இந்தியாவே தலைகவிழ்ந்து

நிற்கிறது..!


மணிப்பூரில் பாரதமாதாவின்

துகிலுரியப்பட்டு...

அப்பப்பா...

வேதனையடா..!


காப்பாற்ற

கண்ணனும் வராமல்

கண்ணயர்ந்து போனானே..!


விடியாதோ...

விடியாதோ...

இன வெறியர்களின் 

பேயாட்டம் விடியாதோ..!


வடியாதோ...

வடியாதோ...

அப்பாவி மக்களின் 

துயர வெள்ளம் வடியாதோ..!


மாளாதோ...

மாளாதோ...

மணிப்பூரின்

மரண ஓலம் மாளாதோ..!


வாலாஜா ஜெ.அசேன் Ex MLA

Tuesday 1 August 2023

மணிமேகலை காப்பிய வரிகளுக்கு மோடியின் ஆட்சியே சாட்சி!

மணிமேகலை காப்பிய வரிகளுக்கு மோடியின் ஆட்சியே சாட்சி!


ஐம்பெரும்
காப்பியங்களில்
ஒன்றாகத் திகழும்
மணிமேகலை காப்பியம்
நீதி தவறி
ஆட்சி புரியும்
மன்னனைக் கொண்ட நாடு 
இயற்கை
இன்னல்களால் அல்லலுறும் நாடு 
மயான
பூமியாகும்
என்பதை..,

"கோல் நிலை திரியின்
கோள் நிலை திரியும்..!
கோள் நிலை திரியின் 
மாரி வரங் கூறும்.
மாரி வரங் கூறின்l
மன்னுயிர் இல்லை..!
மன்னுயிர் எல்லாம்
மண்ணாள் வேந்தன்
தன்னுயிர் என்னும்
தகுதியீன்றாகும்..!"

ஒரு நாட்டின்
செங்கோல் ஆட்சி
தவறுமானால்
இயற்கை தன்னியல்பை
இழக்கும்...
மழை பெய்யாது
கெடுக்கும்...
அதிகம் பெய்தும்
கெடுக்கும்..!

அரசனின்
ஆட்சிக்குட்பட்ட
மக்களே
அரசனுக்கு உயிர்
போன்றவர்கள்.
இந்த உயிர்கள்
பாதிக்கப்பட்டால்
நாடே மயானமாகும்..!

மேற்கண்ட வரிகளை 
இன்றைய
பாரதத்தின் நிலையோடு
ஒப்பிட்டுப் பார்க்கும் போது
ஹிமாச்சல பிரதேசம்,
டெல்லி, பஞ்சாப்,
ஹரியானா, உத்தரகாண்ட்,
உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்களில்
வெள்ளத்தின் ஆட்சி
மக்களின் உயிரோடு
விளையாடிக்
கொண்டிருக்கிறது..!

மணிப்பூர் மாநிலமோ
சொந்த மண்ணிலேயே
மக்கள் அகதிகளாக
அலையும் அவலநிலை..!

அங்கே தீவிரவாதம் தலைவிரித்தாடுகிறது.
மௌனத்தில் மோடிஜி..!

இயற்கையின்
உபாதைகள் மட்டுமல்ல...
கோர ரயில் விபத்துகள்,
பேருந்து விபத்துகள்,  
பணமதிப்பிழப்பு,
வழக்கத்துக்கு மாறான 
இதுவரையில்லாத அளவில்
விலைவாசி உயர்வு,
மணிமேகலை
காப்பிய வரிகளுக்கு
சாட்சியாக உள்ளது.!

மனசாட்சியின் குரலாக 
மாதந்தோறும் 
தற்பெருமைகளை
அலம்பலாக்கும் மோடி
நிலைமைகளை
உணர்ந்து உடனடியாக
ராஜினாமா
செய்ய வேண்டும்..!

இன்றேல் மக்களால்
தூக்கி எறியப்படும்
அவலநிலைக்கு
உள்ளாவார்..!

வாலாஜா ஜெ.அசேன் Ex MLA