Friday 11 June 2021

இளம் பகவத் மாற்றம்! இராணிப்பேட்டைக்கு ஏமாற்றம்!

இளம் பகவத் மாற்றம்! இராணிப்பேட்டைக்கு ஏமாற்றம்!

இராணிப்பேட்டை சார் ஆட்சியராய்
இளம் பகவத் பொறுப்பேற்றது முதல்
ஏற்றம் கண்டது இராணிப்பேட்டை மாவட்டம்!
 
மணற் கொள்ளை மாபியாக்களையும்
இலஞ்சம் ஏதும் இன்றி
எதுவும் நகராது என
அகங்காரமாய் ஆட்டம் போட்ட
கீழ்மட்ட அதிகாரிகளையும்
நடுங்க வைத்த சிங்கம் நீ!
 
சுற்றுச்சூழல் விதிகளை
காற்றில் பறக்கவிட்டு
உலகின்-
மாசடைந்த நகரங்களின் பட்டியலில்
இராணிப்பேட்டையை
மூன்றாம் இடத்திற்குக் கொண்டு வந்த
அபாயகரமான ‘ரெட் கேட்டகிரி’
நச்சு ஆலைகளை துணிச்சலோடு மூடி
தண்டம் விதித்து
தெறிக்கவிட்ட தீப்பொறி நீ!
 
ஏழைகளின் பங்காளனாய்
ஏமாற்றுப் பேர்வழிகளுக்கு எமனாய்
நேர்மை-துணிவுடன் நின்றாய்!
இயலாதவர்களின்
இரட்சகனாய்த் திகழ்ந்தாய் நீ!
 
அன்று
வெள்ளையனை எதிர்த்து
போர் புரிந்தான் பகத்சிங்!
இன்று
கொள்ளையர்களை எதிர்த்து
களம் கண்டான்
இளம் பகவத்!
 
சென்றுவா மகனே! சென்றுவா!
வென்றுவா! சூழ்ச்சிகளை வென்றுவா!
 
வாலாஜா ஜெ.அசேன், Ex.MLA.,
மற்றும்
சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்

Wednesday 9 June 2021

விடியலின் வசந்த விழா!

 விடியலின் வசந்த விழா!
ஆளுநர் மாளிகையில்
ஆர்ப்பாட்டம் இல்லா-ஓர்
எளிய விழா!
கோடிக்கணக்கான தமிழர்
தொலைக்காட்சிப் பெட்டிமுன்!
 
“முத்துவேலர் கருணாநிதி ஸ்டாலின்”
எனும்-ஒலி அலைகள்
செவியில் சங்கமித்த போது
கத்தும் கடல் தந்த முத்தும்-
கலைஞர்தம்
எண்ணக் கடல் தந்த சொத்தும்-
ஸ்டாலினாக
உயிர் பெற்றதை உணர்த்தியது!
 
தளபதியாரின் இணையரின்
விழிகளில்-
ஆனந்தக் கண்ணீர்!
இளைஞர்அணி துவங்கிய போது
உடன் இருந்து
நாங்கள் கண்ட கனவும்
நனவானதால்
எம் விழிகளிலும்-
ஆனந்தக் கண்ணீர்!
 
இந்திய விடுதலை வேள்விக்கு
முதல் வித்திட்ட
வேலூர் கோட்டை வெளியில்
அன்று-இளைஞர் அணி
துவக்க விழாவில்
“தளபதி ஸ்டாலின்” வாழ்கவென
எழுந்த
ஆயிரக்கணக்கான இளைஞர்களின்
துந்துபி முழக்கம்
வேலூர்
கோட்டை மதிலில் மோதி
இன்று-செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில்
வசந்தத்தின் இடி முழக்கமென
எதிரொலிக்கிறது!
 
பதவிக் கூட்டணி அமைக்காமல்
கொள்கைக் கூட்டணி கண்டார்!
தேர்தலிலே வென்றார்!
ஆட்சித் தேரின் வடம் பிடிக்க
அதிகாரிகளை நேர் நிறுத்தி
அனைவர் இதயங்களையும் வென்றார்!
 
கொடிய கொரோனாவிலிருந்து
தமிழகத்தை மீட்க
மாற்றுக் கட்சித் தோழர்களையும்
அரவணைத்து
அவர் ஆற்றும் அரிய பணிகள்
நீதி மன்றத்திற்கே நிறைவைத் தந்தது!
 
வறண்ட பூமிக்கு
வாராமல் வந்த
வான் மழையாக,
பாராண்ட பைந்தமிழ் இனத்தின்
பெருமையை மீட்க
முதல்வர்-
ஸ்டாலின் ஆட்சி!
ஆம்!
உதய நிலவின்
ஒளிக்கிரணங்கள் சூழ்ந்த
வங்கக் கடல் அலை ஓசையில்
தங்கத் தமிழ் மகன் கலைஞரின்
குரல் ஒலிக்கிறது-
 
தமிழர்களே! தமிழர்களே!
நீங்கள் என்னை வங்கக்
கடற்கரையில்
கல்லரை எழுப்பி
ஓய்வெடுக்கச் செய்தாலும்
ஸ்டாலின் வடிவில் வந்து
தமிழினம் தழைக்க
நல்லாட்சி தருவேன்
நீங்கள் மகிழ்ச்சியாக வாழலாம்!”
 
வாலாஜா ஜெ.அசேன், BA, BL., Ex.MLA.,