கொடிய நச்சுக்கழிவுகளை வெளியேற்றும் திருமலை கெமிக்கல்ஸ், அல்ட்ரா மரைன், மல்லாடி உள்ளிட்ட 16 சிவப்பு வகை ஆலைகளாலும்,
ஆண்டுக் கணக்கில் அகற்றப்படாமல் இருக்கும் தமிழ்நாடு குரோமேட்ஸ் மற்றும் கெமிக்கல்ஸ் நிறுவனத்தின் மலைபோல குவிக்கப்பட்டு கிடக்கும் 1.6 லட்சம் டன் குரோமேட் கழிவுகளிலிருந்து வெளியேறும் நச்சுக் கழிவுகளாலும்,
நீர், நிலம், காற்று என் அனைத்தும் மாசடைந்து பாழ்பட்டுவிட்டதால் உலகின் மாசடைந்த நகரங்களில் மூன்றாம் இடத்தில் இருக்கும் இராணிப்பேட்டை, இனி மக்கள் வாழத் தகுதியற்ற பூமியாக மாறிவிட்டதோடு, மக்கள் பல்வேறு நோய்களுக்கு ஆட்பட்டு, அவர்களின் வாழ்வாதாரமும் கேள்விக்குள்ளாகிவிட்டது. ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடைகளும்கூட சுற்றுச்சூழல் கேடுகளிலிருந்து தப்பிக்க முடியவில்லை.
திருமலை கெமிக்கல்ஸ் (TCL) நிறுவனம் தனது ஆலையில் உள்ள நச்சுக் கழிவுகளை 2019 ஆம் ஆண்டு மழைநீர் கால்வாயில் திறந்து விட்டதையொட்டி, ஆலை தற்காலிகமாக மூடப்பட்டு, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு, சில நிபந்தனைகளின் அடிப்படையில் அந்த ஆலை தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.
மழைக் காலங்களில் ஆலைக்குள்ளிருந்து மழைநீர் வெளியே செல்லாத வகையில் நீர் வளையங்களை அமைத்தல், பெருமழைக் காலங்களில் ஆலைக்குள் வழிந்தோடும் நீரை ஆலைக்குள்ளேயே மறுசுழற்சி செய்வதற்கேற்ப, மழை நீர் சேகரிப்பு அமைப்புகளை உருவாக்கி, அந்நீரை மறுசுழற்சி செய்து ஆலையின் தேவைகளுக்குப் பயன்படுத்திக் கொள்ள ஏற்பாடு செய்தல் உள்ளிட்ட நிபந்தனைகளை மாசு கட்டுப்பாட்டு வாரியம் விதித்தபோதும்,
இவற்றையெல்லாம் காற்றில் பறக்க விட்டுவிட்டு, ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலங்களில் ஆலையில் தேக்கி வைத்திருக்கும் கொடிய நச்சுக் கழிவுகளை, மழைநீர் கால்வாயின் வழியாக வெளியே திறந்து விடுவதை திருமலை கெமிக்கல்ஸ் நிறுவனம் வாடிக்கையாக செய்து வருகிறது. மற்றபிற சிவப்பு வகை ஆலைகளும் விதிமீறல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன.
2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரிய அமைச்சரை சந்தித்து முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வாலாஜா ஜெ.அசேன் அவர்கள் தலைமையில் புகார் கொடுத்ததன் அடிப்படையில், 2020 ஆம் ஆண்டு ஜனவரியில் விதிமீறல்களில் ஈடுபட்ட ஆலைகள் முதல் தவணையாக ரூ.18.6 லட்சமும், இரண்டாவது தவணையாக தொடர்ந்து ஐந்தாண்டுகளுக்கு ரூ.6.88 கோடியும் இழப்பீடு வழங்க வேண்டும் என ஆணைகள் பிறப்பிக்கப்பட்ட பிறகும், அதன் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது இன்று வரை தெரியவில்லை.
எனவே, இராணிப்பேட்டையில் இயங்கும் நச்சுக் கழிவுகளை வெளியேற்றும் அனைத்து ஆலைகளையும் முழுமையாக ஆய்வு செய்து, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் விதித்த விதிமுறைகளை கடைபிடிக்காத ஆலைகளை நிரந்தரமாக இழுத்துமூட உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கும், மாவட்ட ஆட்சியருக்கும் வாலாஜா ஜெ.அசேன் அவர்கள் மூலம்
மனு அளிக்கப்பட்டுள்ளது.
பன்நெடுங்காலமாக இந்த மண்ணையே நம்பி வாழும் இராணிப்பேட்டை மக்கள் இம்மண்ணை விட்டு புலம் பெயராமல் இங்கேயே வாழ வேண்டுமானால், ஈரநெஞ்சம் கொண்ட மாவட்ட ஆட்சியர் அவர்கள், கல்நெஞ்சம் கொண்ட நச்சு ஆலைகள் மீது உரிய நடவடிக்கை எடுத்தால், அது மாவட்ட ஆட்சியரின் பொற்காலமாக மட்டுமன்றி, இம்மண்ணின் கடைசி செடிகூட அசைந்தாடி அசைந்தாடி மாவட்ட ஆட்சியரின் புகழ் பாடிக் கொண்டிருக்கும்!
இணைப்பு:
# மாவட்ட ஆட்சியருக்குப் புகார் மனு
# ரூ.18.6 லட்சம் இழப்பீடு குறித்த
21.01.2020 தேதியிட்ட மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் ஆணை.
#ரூ.6.88 கோடி இழப்பீடு குறித்த
19.05.2020 தேதியிட்ட தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் ஆணை