Friday, 27 March 2026

இராணிப்பேட்டை தொகுதியின் விடியலுக்கு வாலாஜா ஜெ.அசேன் சட்டமன்ற உறுப்பினராவது 'காலத்தின் கட்டாயம்'!

முன்னுரை

ஒரு ஊரின் வரலாறு சிதைக்கப்படும்போதும், அதன் இயற்கை வளம் நஞ்சாக்கப்படும்போதும், அந்த மண்ணை மீட்டெடுக்க ஒரு தார்மீகக் குரல் தேவைப்படுகிறது. அந்த வகையில், 2026 சட்டமன்றத் தேர்தலில் இராணிப்பேட்டை தொகுதியின் பிரதிநிதியாக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வாலாஜா ஜெ. அசேன் (BA, BL) அவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவது வெறும் அரசியல் விருப்பம் அல்ல; அது அந்த மண்ணின் காலத்தின் கட்டாயம்.
1. முதல் நகராட்சியின் பெருமையை மீட்டெடுக்க...

1866-ல் உருவாக்கப்பட்ட தமிழ்நாட்டின் முதல் நகராட்சி என்ற பெருமை வாலாஜாபேட்டைக்கு உண்டு. அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நகராட்சியின் தலைவராக (Chairman) சிறப்பாகப் பணியாற்றிய அனுபவம் திரு. அசேன் அவர்களுக்கு உண்டு. நகராட்சி நிர்வாகத்தில் அவர் காட்டிய நேர்மையும், தொலைநோக்குப் பார்வையும் இன்றும் மக்களால் பேசப்படுகிறது. இன்று அந்தப் பெருமை மங்கி வரும் நிலையில், அதை மீட்டெடுக்க அனுபவம் வாய்ந்த ஒரு நிர்வாகி தேவை.

2. கவிஞர், வாசகர், தமிழ் மொழி ஆர்வலர்: ஒரு பண்பாட்டு அடையாளம்

அரசியல் களத்தைத் தாண்டி, திரு.அசேன் அவர்கள் ஒரு சிறந்த கவிஞர், தீவிர வாசிப்பாளர் மற்றும் தமிழ் மொழி ஆர்வலர். "முத்தமிழ் சுவைச் சுற்றம்" என்கிற இலக்கிய அமைப்பின் மூலம் ஆண்டுதோறும் இலக்கிய விழாக்களை நடத்தி, இளம் படைப்பாளிகளை ஊக்கப்படுத்தி வருகிறார். அவரது ஆழமான கவிதைகளை “நீதிக்கான குரல்” வலைப்பக்கத்தில் காணலாம். மேலும், ஆண்டுதோறும் சமத்துவப் பொங்கல் விழாவை முன்னின்று நடத்தி, சமூக நல்லிணக்கத்தைப் பேணி வருகிறார்.

3. ஒரு இளைஞனைப் போன்ற களப் போராட்டங்கள்!

வயது என்பது வெறும் எண் மட்டுமே என்பதை நிரூபிக்கும் வகையில், இன்றும் ஒரு இளைஞனைப் போலத் துடிப்போடு களத்தில் நிற்பவர் திரு. அசேன்.

தேசியப் பிரச்சினைகள்: CAA, NRC மற்றும் ஹிண்டன்பர்க் அறிக்கை போன்ற விவகாரங்களில் ஜனநாயகத்தைக் காக்க வீதியில் இறங்கிப் போராடியவர்.

உள்ளூர் பிரச்சினைகள்: ஊழல் முறைகேடுகள், போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கும் சாலை மாடுகளைக் கட்டுப்படுத்த நகராட்சிக்கு எதிராகப் போராட்டம் என மக்களின் அன்றாடத் துயர்களுக்காகத் தொடர்ந்து குரல் கொடுப்பவர்.

சுற்றுச்சூழல் போர்: உலகின் 3-வது மாசடைந்த நகரம் - ஒரு அபாய எச்சரிக்கை!

இன்று இராணிப்பேட்டை உலகின் மாசடைந்த நகரங்களின் பட்டியலில் 3-வது இடத்தைப் பிடித்துள்ளது என்பது அதிர்ச்சியளிக்கும் உண்மை. குரோமியக் கழிவுகள் மற்றும் ஆலைகளின் நச்சுக்கழிவுகளால் நிலத்தடி நீர் நஞ்சாகி, மக்களின் ஆரோக்கியம் கேள்விக்குறியாகியுள்ளது.

கடந்த 25 ஆண்டுகளாகச் சமரசமின்றிச் சுற்றுச்சூழல் போரை முன்னெடுத்து வருபவர் திரு.அசேன்.

அமைச்சர்களுக்கும், மத்திய அரசுக்கும் தரவுகளுடன் கடிதம் எழுதியதோடு, நேரடியாக டெல்லிக்குச் சென்று சுற்றுச்சூழல் அதிகாரிகளைச் சந்தித்து, நச்சு ஆலைகளுக்குக் கோடி கணக்கில் அபராதம் விதிக்கக் காரணமாக இருந்தவர்.

இந்தச் சாபக்கேட்டைத் துடைத்தெறிய, ஒரு சட்டமன்ற உறுப்பினராக அவருக்கு அதிகாரம் கிடைப்பது காலத்தின் தேவை.


4. 1989-ல் நிகழ்ந்த ‘மக்களின்’ வெற்றி!

1989 சட்டமன்றத் தேர்தலில், அப்போதைய அரசியல் சூழலில் அவருக்குத் தொகுதி ஒதுக்கப்படாதபோதும், மக்களின் பேராதரவுடன் சுயேச்சையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். கட்சிச் சின்னம் இல்லாமலேயே ஒரு மாபெரும் அலையை வென்று காட்டிய அவர், இன்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநிலத் துணைத்தலைவராக (State Vice President) உயரிய பொறுப்பில் இருந்து வழிநடத்தி வருகிறார்.

5. ஏன் அவர் திமுக கூட்டணி வேட்பாளராக வேண்டும்?

அதிமுக கூட்டணியில் இத்தொகுதி தமாகா-விற்கு (தாமரை சின்னம்) ஒதுக்கப்பட்டுள்ளது, மதச்சார்பற்ற வாக்காளர்கள் மத்தியில் ஒரு மிகப்பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சூழலில், சிறுபான்மையினர் வாக்குகள், திமுகவின் வாக்கு வங்கி மற்றும் அசேனின் தனிப்பட்ட செல்வாக்கு ஆகிய மூன்றுமே இணைந்து ஒரு மிகப்பெரிய வெற்றியை உறுதி செய்யும்.

முடிவுரை

"நல்லவை அல்லவைகளை சீர்தூக்கிப் பார்க்கிற" ஆற்றல் கொண்ட இராணிப்பேட்டை மக்கள், இன்று ஒரு இக்கட்டான சூழலில் இருக்கிறார்கள். வரலாற்றுப் பெருமை கொண்ட ஒரு நகரை, நச்சுக்கழிவுகளின் பிடியிலிருந்து மீட்கவும், பண்பாட்டுச் செழுமையைப் பாதுகாக்கவும் தெரிந்த ஒரே ஆளுமை திரு. அசேன் அவர்களே!

இராணிப்பேட்டையின் விடியலுக்காகவும், வருங்காலத் தலைமுறையின் ஆரோக்கியத்திற்காகவும் திரு.வாலாஜா ஜெ.அசேன் சட்டமன்றத்திற்குச் செல்வதே அந்த மண்ணிற்குச் செய்யும் உண்மையான நீதியாகும்!

பொன்.சேகர், BE. ML. MPhil,
(மேலாளர், பணி ஓய்வு, BHEL, Ranipet)
வழக்கறிஞர்

Friday, 16 January 2026

ஒன்றும் தெரியாத பாப்பா போட்டுக்கொண்டாளாம் தாப்பா!

"ஒன்றும் தெரியாத பாப்பா போட்டுக்கொண்டாளாம் தாப்பா!" - எனும் கிராமத்துப் பழமொழிக்கேற்ப, ஊழலின் உச்சம் தொட்டவர்கள் இன்று உத்தமர் வேஷம் போடுகிறார்கள்!

'ஆட்சியில் ஊழல், ஊழல், ஊழல்' என்று ஊர் ஊராகப் பல்லிளித்துப் பேசி வருகிறார் பழனிசாமி..!

  • அடையாளம் தெரியாமல் இருந்த அக்ரகாரச் சிறையை, அகில இந்தியாவிற்கும் அடையாளம் காட்டியது யார் ஆட்சி?

  • செயின்ட் ஜார்ஜ் கோட்டையை கோட்டைவிட்ட பிறகு, நீதிமன்ற வளாகங்களில் உலாவரும் முன்னாள் அமைச்சர்கள் எந்தக் கட்சி?

  • குட்கா ஊழல் வழக்குத் தொடர்பாக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் உட்பட 21 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதை இவ்வளவு சீக்கிரம் மறந்துவிடலாமா?

அங்கிங்கெனாதபடி ஊழல் செய்ததால் அமலாக்கத் துறையிடம் மாட்டி, அமித்ஷாவிடம் அடிமைச் சாசனம் எழுதிக் கொடுத்துச் சோரம் போனவர்களா வீரம் பேசுவது? அமித்ஷாவின் உடல் அசைவுக்கு ஏற்ப அம்மிக்கல்லாய் உருளும் அர்த்தநாரிகள் மீண்டும் ஆளக் கனவு காண்பதா, ஊர்ந்து ஊர்ந்து சென்று பாத பூஜை நடத்திப் பதவி பெற்றவர்!

தியாகக் கனலில் புடமிடப்பட்டு, பொதுநலத்தில் தன்னை அர்ப்பணித்து, தமிழகத்தின் வரலாற்றையே மாற்றி, நிர்வாகத் திறனில் தமிழகத்தை முதன்மை மாநிலமாகத் தலைநிமிரச் செய்தவர் நம் முதல்வர். தமிழ் மணம் கமழப் புத்தாண்டை மலரச் செய்த வித்தகன் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினை, இனப்பற்றற்ற, மொழிப்பற்றற்ற பாதம் தாங்கிகள் வீழ்த்த நினைப்பது துரோகத்தின் உச்சகட்டம்!

எம்.ஜி.ஆர் அவர்களாலும், அம்மையார் ஜெயலலிதாவாலும் இரும்புக் கோட்டையாகக் கட்டியமைக்கப்பட்ட அதிமுகவை மணல் கோட்டையாக்கிச் சிதைத்து, விழுதுகளையெல்லாம் வெளியேற்றி, கட்சியை அடமானம் வைத்தது போல் தமிழகத்தின் உரிமைகளையும் அமித்ஷாவிடம் அடமானம் வைக்க ஆலாய்ப் பறந்து கொண்டிருக்கிறீர்கள்!

தங்களின் பேச்சு "கூரை ஏறி கோழி பிடிக்காதவன், வானமேறி வைகுண்டம் காட்டுவேன்" என்று கூறுவதைப் போன்ற வெற்றுப் பேச்சு! வரலாறு உங்களை ஒருபோதும் மன்னிக்காது!

- வாலாஜா அசேன், முன்னாள் MLA

Friday, 19 December 2025

கரூர் துஷ்ட தேவதையின் பகற்கனவு!

தமிழினத்தின் காவல்தெய்வமாய்,
தமிழினக் கலாச்சார,
பண்பாட்டு,, பாதுகாப்பு
அரணாக உள்ள..,
அண்ணா கண்டெடுத்து.,
கலைஞரால் வளர்த்தெடுத்த
தாய்க் கழகத்தை.,

பேசமுடியாத ஊமையான
மகனொருவன்.,
எப்போது பேசுவான் என எதிர்பார்த்தபோது..,


"அம்மா நீ எப்போது தாலியறுப்பாய்"
என்று பேசியதுபோல்
திமுகவை திடீரென தாக்கிப் பேசுவது..,
கோடைக்கால சூரியனை,
கார்கால மின்மினி பழிப்பதற்கு
ஒப்பாக இருக்கிறது..!

அண்ணாவின்
நிழலில் வளர்ந்து,
கழகத் தோழர்களால்
போற்றப்பட்ட,
வள்ளல் 
எம்ஜிஆர் அவர்களாலும்_,
மோடியா லேடியா
என சவால்விட்ட
அயர்ன் லேடியாலும்
அழிக்க முடியாதபோது..,

கரூர் நரபலி
துஷ்ட தேவதையால்
மட்டும் அழித்துவிட முடியுமா.?

இயக்கம் துவக்கும்போது
அதன் தலைவர்கள்,
நாட்டின் வளர்ச்சியைப்பற்றி
பேசுவது
அரசியல் கண்ட வரலாறு.!

தட்டினால் தங்கம்,
வெட்டினால் வெள்ளி,
இடித்தால் இரும்பு..!
வளம்கொண்ட தமிழகத்தை
ஆட்சிக்கு வந்தால்
செழிப்பாக்குவேன் என்றார்..,
"பேரறிஞர் அண்ணா" .!

என்ன வளம் இல்லை
இந்தத் திருநாட்டில்
ஏன் கையை ஏந்த வேண்டும்
வெளிநாட்டில் என்றே
முழங்கினார்
"புரட்சித் தலைவர்".,.!

ஆனால்.,
ஆரம்பத்திலேயே
அழிப்பேன்.,
ஒழிப்பேன் என்ற
முழக்கத்துடன்
பயணத்தைத் துவக்கியுள்ளது
இந்த "துஷ்ட தேவதை"...,..!

2026 இல் நடைபெறப்போகும் தேர்தல்,
அரசியல் ரீதியான போட்டியல்ல..!
குஜராத் கும்பனி ஆதிக்க
வெறிக்கு எதிராக
தமிழ் மொழியையும்,
தமிழ் இனத்தையும்,
தமிழ் கலாச்சாரத்தையும்,
காக்கப் போராடும் களம்..!

ஒரிசா தேர்தலில்
தமிழனைத் திருடன்
என வர்ணித்தும்,
பீகார் தேர்தலில்,
தமிழகத்தில் பீகாரிகள்
தாக்கப்படுகிறார்கள் என
பழிசுமத்தி,
தமிழினத்தின் மீது
விரோதத்தை வளர்த்துவரும்
பாஜகவிற்கு எதிராக
குரல்கொடுக்க திராணியற்றவர்களை நம்பத் தமிழர்கள் ஏமாளிகள் அல்ல.!

தமிழகம் இன எழுச்சி எரிமலை.!
மொழி காக்க புயலெனப்
போராடத் துடிக்கும்
மறவர்களின் கோட்டம்.!

தாய் எட்டடி பாய்ந்தால்
குட்டி பதினாறடி பாயும் என்பதை மாற்றி, முப்பத்திரண்டு அடி
பாய்ந்து, இந்தியாவிலேயே
அனைத்துத் துறைகளிலும்
தமிழகத்தை முன்னோடியாக
தலைநிமிரச் செய்த
தமிழக முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களை
வீழ்த்த நினைப்பது...

கொல்லன் உலைக்கு
தாங்காத மோதிரம்,
தகிக்கும் சூரியனையே
தன் வாய்க்குள்
விழுங்க நினைக்கும்
விசித்திரம்..!

வாலாஜா ஜெ.அசேன் Ex.MLA

Saturday, 2 August 2025

ஆலைக் கழிவுகளால் வாழத் தகுதியற்ற இடமாய் மாறிவிட்ட இராணிப்பேட்டை!

கொடிய நச்சுக்கழிவுகளை வெளியேற்றும் திருமலை கெமிக்கல்ஸ், அல்ட்ரா மரைன், மல்லாடி உள்ளிட்ட 16 சிவப்பு வகை ஆலைகளாலும்,

ஆண்டுக் கணக்கில் அகற்றப்படாமல் இருக்கும் தமிழ்நாடு குரோமேட்ஸ் மற்றும் கெமிக்கல்ஸ் நிறுவனத்தின் மலைபோல குவிக்கப்பட்டு கிடக்கும் 1.6 லட்சம் டன் குரோமேட் கழிவுகளிலிருந்து வெளியேறும் நச்சுக் கழிவுகளாலும்,

நீர், நிலம், காற்று என் அனைத்தும் மாசடைந்து பாழ்பட்டுவிட்டதால்  உலகின் மாசடைந்த நகரங்களில் மூன்றாம் இடத்தில் இருக்கும் இராணிப்பேட்டை, இனி மக்கள் வாழத் தகுதியற்ற பூமியாக மாறிவிட்டதோடு, மக்கள் பல்வேறு நோய்களுக்கு ஆட்பட்டு, அவர்களின் வாழ்வாதாரமும் கேள்விக்குள்ளாகிவிட்டது. ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடைகளும்கூட சுற்றுச்சூழல் கேடுகளிலிருந்து தப்பிக்க முடியவில்லை.

திருமலை கெமிக்கல்ஸ் (TCL) நிறுவனம் தனது ஆலையில் உள்ள நச்சுக் கழிவுகளை 2019 ஆம் ஆண்டு மழைநீர் கால்வாயில் திறந்து விட்டதையொட்டி, ஆலை தற்காலிகமாக மூடப்பட்டு, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு, சில நிபந்தனைகளின் அடிப்படையில் அந்த ஆலை தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.
 
மழைக் காலங்களில் ஆலைக்குள்ளிருந்து மழைநீர் வெளியே செல்லாத வகையில் நீர் வளையங்களை அமைத்தல், பெருமழைக் காலங்களில் ஆலைக்குள் வழிந்தோடும் நீரை ஆலைக்குள்ளேயே மறுசுழற்சி செய்வதற்கேற்ப, மழை நீர் சேகரிப்பு அமைப்புகளை உருவாக்கி, அந்நீரை மறுசுழற்சி செய்து ஆலையின் தேவைகளுக்குப் பயன்படுத்திக் கொள்ள ஏற்பாடு செய்தல் உள்ளிட்ட  நிபந்தனைகளை மாசு கட்டுப்பாட்டு வாரியம் விதித்தபோதும்,

இவற்றையெல்லாம் காற்றில் பறக்க விட்டுவிட்டு, ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலங்களில் ஆலையில் தேக்கி வைத்திருக்கும் கொடிய நச்சுக் கழிவுகளை, மழைநீர் கால்வாயின் வழியாக வெளியே திறந்து விடுவதை  திருமலை கெமிக்கல்ஸ் நிறுவனம் வாடிக்கையாக செய்து வருகிறது. மற்றபிற சிவப்பு வகை ஆலைகளும்  விதிமீறல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன.
 
2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரிய அமைச்சரை சந்தித்து முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வாலாஜா ஜெ.அசேன் அவர்கள் தலைமையில் புகார் கொடுத்ததன் அடிப்படையில், 2020 ஆம் ஆண்டு ஜனவரியில் விதிமீறல்களில் ஈடுபட்ட ஆலைகள் முதல் தவணையாக ரூ.18.6 லட்சமும், இரண்டாவது தவணையாக தொடர்ந்து ஐந்தாண்டுகளுக்கு ரூ.6.88 கோடியும் இழப்பீடு வழங்க வேண்டும் என ஆணைகள் பிறப்பிக்கப்பட்ட பிறகும், அதன் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது இன்று வரை தெரியவில்லை. 

எனவே, இராணிப்பேட்டையில் இயங்கும் நச்சுக் கழிவுகளை வெளியேற்றும் அனைத்து ஆலைகளையும் முழுமையாக ஆய்வு செய்து, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் விதித்த விதிமுறைகளை கடைபிடிக்காத ஆலைகளை நிரந்தரமாக இழுத்துமூட உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கும், மாவட்ட ஆட்சியருக்கும் வாலாஜா ஜெ.அசேன் அவர்கள் மூலம்
மனு அளிக்கப்பட்டுள்ளது.

பன்நெடுங்காலமாக இந்த மண்ணையே நம்பி வாழும் இராணிப்பேட்டை மக்கள் இம்மண்ணை விட்டு புலம் பெயராமல் இங்கேயே வாழ வேண்டுமானால், ஈரநெஞ்சம் கொண்ட மாவட்ட ஆட்சியர் அவர்கள், கல்நெஞ்சம் கொண்ட நச்சு ஆலைகள் மீது உரிய நடவடிக்கை எடுத்தால், அது மாவட்ட ஆட்சியரின் பொற்காலமாக மட்டுமன்றி, இம்மண்ணின் கடைசி செடிகூட அசைந்தாடி அசைந்தாடி மாவட்ட ஆட்சியரின் புகழ் பாடிக் கொண்டிருக்கும்!

இணைப்பு:

# மாவட்ட ஆட்சியருக்குப் புகார் மனு 

# ரூ.18.6 லட்சம் இழப்பீடு குறித்த
 21.01.2020 தேதியிட்ட மத்திய மாசு  கட்டுப்பாட்டு வாரியத்தின் ஆணை. 

#ரூ.6.88 கோடி இழப்பீடு குறித்த
 19.05.2020 தேதியிட்ட தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் ஆணை






Wednesday, 2 April 2025

அடக்கம் அமரருள் உய்க்கும்...!

அடக்கம் அமரருள் உய்க்கும்...
அண்ணாமலை  
எனும் புண்ணாக்கு 
போட்டாரே தப்புக் கணக்கு..!

காக்கியைக் கழட்டினார்.,
காவியில் குடி புகுந்தார்..!
ஆவி தீர..,
அண்டா வாயால்
அண்டப் புளுகை
அவிழ்த்து விட்டார்..!

அரசமரத்தைச் சுற்றியதும்
அடிவயிற்றை
தடவிப் பார்ப்பதுபோல்
அரசியலில்
அடியெடுத்து வைத்தவுடன்
முதலமைச்சர் பதவிக்கு 
குத்தாட்டம் போட்டார்..!

***
அவரைப் போல
ஒரு ஐ.ஏ.எஸ்
காங்கிரஸில் சேர்ந்தார்..!
அடக்கமாக
களம் கண்டார்..!
அன்புடன் மக்களைக்
கவர்ந்தார்..!
பொய் புரட்டு வாந்தி
எடுக்கவில்லை..!
மக்கள் இதயங்களை
வென்றார்..!

கடந்த..,
மக்களவைத் தேர்தலில் 
சுமார் ஐந்தரை 
இலட்சம் வாக்குகள் 
வித்தியாசத்தில்
சந்தித்த முதல்
களத்திலேயே
வெற்றிவாகை சூடி
எம்.பி ஆனார்..!
அவர்தான் 
சசிகாந்த் செந்தில் MP..!

***
தன் தற்பெருமை அரசியலால்
எல்லாக் களங்களிலும்
தோல்விகளே
பரிசாகப் பெற்றார்.!
பாவம் சாட்டைவீச்சு
கழைக் கூத்தாடியாக
அவரை நிற்க வைத்த
அவலத்தை
தமிழகம் கண்டது..!

எம் பாட்டன் சொன்னான்..,
"அடக்கம் அமரருள்
உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்."
என்று..!
இரண்டு இலட்சம் 
புத்தகங்கள் படித்ததாக
தம்பட்டம் அடித்த அவர்...
பாட்டன் வள்ளுவனைப்
படிக்க மறந்து 
விட்டாரே...? 🤔

வாலாஜா ஜெ.அசேன் Ex.,MLA

Thursday, 5 December 2024

அதானியின் ஊழல் மேக வெடிப்பு!

அதானியின் ஊழல் மேக வெடிப்பு!

ஊழல் பெருங்கடலில் 
உலா வந்த 
அதானியின் தோணி..!
அதுவே மோடிஜீயின் பாணி..!
அமெரிக்க நீதியலைகள் கவிழ்த்ததே காணீர்..!

ஏற்கனவே,
பதினேழு விதேசி விருதுகள் வாங்கியவருகு..,
நேற்று,
கயானா, டொமினிக்கா, பார்படோஸ் நாடுகளின் 
உயரிய விருதுகள் 
வழங்கிய நேரத்தில்..,

சட்டத்தின் சன்னிதானத்தில்
அமெரிக்க நீதிமன்றமும்
குற்றப் பத்திரிக்கையை 
வாசித்துள்ளது..!


கடந்த காலத்தில்
அமெரிக்காவின் ஹிண்டன்பெர்க்
ஆய்வு நிறுவனம்
மொரீஷியசில் இல்லாத
நிறுவனத்திலிருந்து
இருபதாயிரம் கோடி ரூபாய்
அதானி குழுமத்திற்கு
வந்தது எப்படி என
குற்றம் சாட்டியது..!

இப்போது
அமெரிக்க நீதிமன்றத்தில்
குற்றப்பத்திரிக்கை
அறிவிப்பு..!
இது ஊழல்
மேக வெடிப்பு..!

இதுவரை
நமக்குத் தெரிந்தது...,
டெல்லிகேட்,
டோல்கேட்,
கோல்கேட்,
இப்போது அதானியின் "ப்ரைப்"கேட்..!
இது மோதானியின்
உச்சகட்ட சாதனை..!

கூடாநட்பு கேடாய்
முடியுமென
ஆரம்பத்திலேயே
சங்கு ஊதிய
சரித்திர நாயகன்
ராகுல்ஜீ...
இப்போது
வியாபாரி அதானியைக்
கைது செய்ய
எரிமலையாய் வெடிக்கிறார்..!

விசாரணை தீர்ப்பு வந்தால்தான் 
குற்றவாளியென
மோதானி பாய்ஸ் புலம்பல்..!

இந்த புத்தி
இந்தியாவின்
பொருளாதார மேதை
முன்னாள் உள்துறை அமைச்சர்
ஐயா ப.சிதம்பரம்  அவர்களை
106 நாட்கள்
விசாரணைக் கைதியாக
பழிவாங்கிய போது
எங்கே போனது..!

மதப்போர்வையால் மறைக்கப்பட்டுள்ள
மாயாஜால வித்தைகள் 
இனி
மக்கள் அரங்கில் எடுபடாது..!
தெய்வம் நின்று கொல்லும்..!!

வாலாஜா ஜெ.அசேன் Ex.MLA

சாக்கடை நீரில் மிதக்கும் வாலாஜா மகளிர் கல்லூரி!

வட தமிழ்நாட்டை உலுக்கிய ஃபெஞ்சலைக் கண்டு ஓடி ஒளிந்திருந்த மூடுபனி, புயல் அகன்றதை எட்டிப்பார்த்து பூமித்தாயை சூழ்ந்து கொண்டது. மூடுபனி பார்ப்பதற்குச் சாதுவாய் தோன்றினாலும் அதுகூட பலரை முடக்கிவிடும். இது ஒரு ஊமகொட்டான். ஆனாலும் என்னை இதமாய் வருடிவிடும் காதலி இது. இன்று இவளைக் கைபிடிக்க கையில் கைபேசியோடு புறப்பட்டேன்.

வழக்கமான பாதைதான் என்றாலும் அவளை பரந்தவெளியில் கைபிடிக்க, திறந்தவெளி நோக்கிச் சென்றேன். செல்லும் வழியில் கழிவுநீர் வாய்க்கால் பராமரிப்பின்றி கிடப்பதால் அண்மையில் பெய்த மழை நீர் பெருக்கெடுத்து கணபதி நகர் டி.என்.எச்.பி சாலையில் புரண்டோடி சரலைகளால் சாலை வேயப்பட்டிருந்தது.

விசாலமான இடத்தில் மூடுபனியை கைக்குள் அடக்கி, அருகில் குளிருக்கு இதமாய் நீண்ட கவுன் அணிந்து ஒய்யாரமாய் நின்ற ஒற்றைப் பனையையும் அணைத்துக் கொண்டு, அக்கம் பக்கம் பார்த்த போது அருவெறுப்பே மிஞ்சியது.

எடக்குப்பம்-அனந்தலை செல்லும் கூட்டுச் சாலையின் முகப்பில் வலப்பக்கம் அறிஞர் அண்ணா அரசு மகளிர் கல்லூரி. அங்கே அதன் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து குப்பை கொட்டும் பாழிடமாய் மாறிவிட்டது. வாலாஜாவிலிருந்து ஓடிவரும் சாக்கடை நீரில் கல்லூரி வளாகம் மூழ்கிப் போனது.

அதற்கு எதிரில் ஈமக்கிரியை செய்யும் குளக்கரையின் இடப்பக்கம் ஏழை மகளிர் தங்கும் விடுதி, வலப்பக்கம் ஆதிதிராவிடர் மாணவர் விடுதி, இரண்டுக்கும் இன்றும் மண்பாதைதான். இருண்டு விட்டால் கைபேசிதான் பாதை காட்டும்

அங்கு, முச்சந்தியில் கொட்டப்படும் நகரக் கழிவுகளின் நாற்றத்தில் நாள்தோறும் அவதியுறும் விடுதி வாசிகள். குளக்கரையில் காரியம் செய்பவர்களைக்கூட இந்த நாற்றம் தொடாமல் விடுவதில்லை. ஆனால் அது அவர்களுக்கு ஒரு நாள் கேடு. ஆனால் விடுதி வாசிகளுக்கோ அது ஒவ்வொரு நாளும் கேடு.

இதற்கு மேற்கே, சென்னை செல்லும் முதன்மைச் சாலையில் தீனபந்து ஆசிரமம். அதையொட்டி அதன் அருகே சாலை ஓரங்களில் கொட்டப்படும் குப்பைக் கழிவுகள் அருவருப்பின் உச்சம்.

சுற்றிலும் மாணவர்கள். பூஞ்சோலையாய் பராமரிக்கப்பட வேண்டிய இடம் இன்று பேய்கள் உலாவும் இருண்ட காடாய் உரைந்து கிடக்கும் எடக்குப்பம் கூட்டுச்சாலை. அதிகாரிகளின் கண்கள் திறக்குமா? இருண்ட காட்டில் வெளிச்சம் பாயுமா?

ஊரான்

தீனபந்து வளாகம்

எடக்குப்பம் கூட்டுச்சாலை கல்லூரி வளாகம்


எடக்குப்பம் கூட்டுச்சாலை கல்லூரி வளாகம்